துப்பாக்கிச் சூடு: தூத்துக்குடி வருகிறது தேசிய மனித உரிமை ஆணைய குழு
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையக் குழு தூத்துக்குடிக்கு வருகிறது.
தூத்துக்குடி: 13 பேர் பலியாக காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையக் குழு தூத்துக்குடிக்கு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்ற மக்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் 144 தடை அமலில் உள்ளதால் பேரணி செல்லக் கூடாது என்று தடுத்தனர். எனினும் ஸ்டெர்லைட் ஆலையால் தங்கள் உறவினர்களை இழந்த மக்கள் மேலும் முன்னோக்கி சென்று ஆட்சியரகத்தை அடைந்தனர்.
அப்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் குழு இந்த துப்பாக்கிச் சூடு விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதன்படி 4 பேர் கொண்ட குழு தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க தூத்துக்குடிக்கு வரவுள்ளனர். இந்த விசாரணை முடிந்தவுடன் 2 வாரங்களில் துப்பாக்கி சூடு பற்றி மனித உரிமை ஆணையம் அறிக்கையளிக்கும் என்று தெரிகிறது.