அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை.. தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமை ஆணையம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து விளக்கம் அளிக்க கோரி, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்கம் கோரி நோட்டீஸ் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
அதில் தமிழக தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் 8 வாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கு காரணம் என்னவென்றும் அதனை சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு மருத்துவமனைகளில் 8000 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.