தொல்லை தருகிறார்.. தந்தை மீது புகார் கொடுத்த ஈஷா பெண் சன்னியாசிகள்.. மகளிர் ஆணையம் விசாரணை
கோவை: ஈஷா யோகா மையத்தில் இருக்கும் சன்னியாசி பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர்களது தந்தை காமராஜிடம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மா சாகு விசாரணை மேற்கொண்டார்.
கோவை ஈஷா மையத்தில் சன்னியாசம் பெற்ற கீதா, லதா என்ற இரு பெண்களின் தந்தையான காமராஜ், ஈஷா மையம் தனது மகள்களுக்கு மூளை சலவை செய்து சன்னியாசிகளாக்கியுள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், அவ்விரு பெண்களும் தாங்கள் விரும்பி சன்னியாசம் பூண்டதாக தெரிவித்தனர். பெண்களின் தாயார் ஹைகோர்ட்டில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், கோவை மாவட்ட முதன்மை நீதிபதியை ஈஷாவுக்கு நேரில் சென்று விசாரித்து வர உத்தரவிட்டது. விசாரணையும் முடிந்தது.
புகார்
இந்நிலையில், கீதா மற்றும் லதா இருவரும் கடந்த 4 ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திற்கு மனு ஓன்றை அனுப்பியிருந்தனர். அந்த மனுவில் ஈஷா யோகா மையத்தில் தாங்கள் மனநிறைவோடு இருப்பதாகவும் தங்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக தங்களின் பெற்றோர் நடந்து கொள்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.
மிரட்டல்
மேலும் மர்மநபர்கள் சிலர் போன் மூலம் மிரட்டல் விடுப்பதாகவும் தங்கள் விருப்பபடி வாழ்வதற்கு தேசிய மகளிர் ஆணையம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விசாரணை
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு ஈஷா யோகா மையத்தில் இரு பெண்களிடமும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார். இதனை தொடந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் பேராசிரியர் காமராஜிடம் விசாரணை மேற்கொண்டார். ஓரு மணி நேரத்திற்கும் மேலாக லதா புகார் குறித்து பேராசிரியர் காமராஜிடம் மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு விசாரணை மேற்கொண்டார்.
ஆதாரங்கள்
இதை தொடந்து விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு, பேராசிரியர் காமராஜிடம் ஈஷா மையத்தில் தங்கி இருக்கும் பெண்கள் கொடுத்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையின் போது ஈஷா மையத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை காமராஜ் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அறிக்கை
ஈஷா மையத்தில் இரு பெண்கள் கொடுத்த வாக்குமூலம் மற்றும் பேராசிரியர் காமராஜிடம் நடத்திய விசாரணை ஆகியவை அடிப்படையில் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட இருப்பதாகவும் சுஷ்மா சாகு தெரிவித்தார்.