நோ கூல்டிரிங்ஸ்.. பழைய சோறும் சின்ன வெங்காயமும் போதுமே-வாசகரின் ஜில் ஐடியா!
செயற்கை பானங்களை தவிர்த்து இயற்கைபானங்களை அருந்த வாசகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: செயற்கை பானங்களை அருந்துவது என்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது.
கோடை வெயிலை பயன்படுத்தி, செயற்கைபானங்களை மக்கள் தலையில் கட்டி, அதன்மூலம் கல்லா கட்ட ஏராளமான கடைகள் சாலையோரங்களில் முளைக்க ஆரம்பித்துவிட்டன. இந்த செயற்கை பானங்களை எல்லாம் தவிர்த்து, நம் உறவாடும் உணர்வோடும் கலந்த இயற்கை பானங்களையே பருக வேண்டும் என எமது சென்னை வாசகர் ரா.கண்ணப்பன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் இதோ:
வெய்யிலின் தாக்கம், கோடையின் வெப்பம் தற்போது கடுமையாக உள்ளது, எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் அடங்குவதே இல்லை. குளிர்பான நிறுவனங்களுக்கு இது அறுவடைகாலம்.இந்த நேரத்திலேதான் குளிர்பான விற்பனை அமோகமாக இருக்கும். குடிக்க தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கடைகளில் குளிர்பானங்கள் தாராளமாக விற்பனைக்கு கிடைக்கும். அந்த குளிர்பானங்களை வாங்கி குடிப்பதிலேதான் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்லாமே விளம்பர தாக்கம்
எல்லாமே விளம்பரத்தின் தாக்கம், நாகரிகத்தின் மோகம். இதன் விளைவாக தாகத்திற்கு சோடா, கலர் வாங்கி குடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். சோடா, கலர் என்பது என்ன? உப்பு கலந்த தண்ணீர் மற்றும் சக்கரை கலந்த தண்ணீர். தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கலாம் தப்பில்லை. அதைவிடுத்து உப்புத்தண்ணீரையும்,சர்க்கரைத் தண்ணீரையும் குடிக்கச் சொன்ன புத்திசாலி யார்? இவைகளை குடிக்கலாமா? அது அப்போதைக்கு தொண்டைக்கு இதமாக இருக்கும். ஆனால் அந்த குளிர்பானங்கங்களில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிபொருள்கள் கலந்திருக்கின்றன என்பதைத் தெரிந்தும் குடிப்பது வேதனை அளிக்கிறது.
பக்கவிளைவு நிச்சயம்
சிலர் அதனுடைய தீங்கு என்னவென்றே தெரியாமலும் அறியாமையாலும் வாங்கிக்குடிக்கின்றனர். குளிர்பானங்களை வாங்கி குடிக்க குடிக்க சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் வரும் ஆபத்தை யாரும் உணருவதில்லை. அவைகள் பக்கவிளைவுகளையும் ஒவ்வாமையையும் நிச்சயமாக ஏற்படுத்தலாம். அடுத்தது ஐஸ் வாட்டர். இதைக் குடிப்பதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் விளைவாக சளி, காய்ச்சல் வருவதையும் நாம் பார்த்திருக்கலாம். அப்படியிருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதையேதான் குடிக்கிறார்கள்.
நீராகாரமும்-வெங்காயமும்
எல்லாம் காலத்தின் கோலம் என்றுதான் சொல்லவேண்டும். இவர்களெல்லாம் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள். கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கிக் குடித்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற விழிப்புணர்வுகூட இல்லாமல் போய்விட்டது. உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்காத நம் முன்னோர்கள் பருகி வந்த மிகவும் பாதுகாப்பான நமது பாரம்பரிய கோடை கால பானங்களான பழையசோற்று நீராகாரமும், கடிச்சுக்க சின்ன வெங்காயமும் இருக்கும்போது ஆரோக்கியத்துக்கு என்ன குறை?
இருக்கவே இருக்கு நீர்மோர், பதநீர்
இதைத் தவிர நீர்மோர், பானகம், பதநீர், இளநீர், கம்மங்கூழ் ஆகியவற்றை நாம் மறந்துவிட்டோம். இந்த பானங்கள் எல்லாமே ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது. களைப்பை நீக்கி, அதேநேரத்தில் தாகத்தையும் தணித்து குளிர்ச்சியையும் தரக்கூடியது. ஆரோக்கியமானதும் இயற்கையானதும் எளிதாக கிடைக்கக்கூடியதும்கூட. அதுமட்டுமல்ல, பனை நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி போன்றவைகளும் கோடை வெப்பத்தை தணிக்கக்கூடியது. இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு செயற்கை குளிர்பானங்களின் பின்னால் செல்பவர்களை என்னவென்றுசொல்வது?
இவ்வாறு வாசகர் ஆர்.கண்ணப்பன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.