இந்திய பெருங்கடலில் 3 நாட்களாக சிக்கி தவித்த ஒரு மனிதர்.. களமிறங்கிய 3 நாட்டு படை.. யார் இவர்?
நடு கடலில் சிக்கி தவித்த இந்தியாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமியை மீட்க பல நாட்டு படைகள் உதவிக்கு வந்துள்ளது.
Recommended Video
சென்னை: நடு கடலில் சிக்கி தவித்த இந்தியாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமியை மீட்க பல நாட்டு படைகள் உதவிக்கு வந்துள்ளது. இவர்களின் உதவியுடன் இவர் சிறிது நேரத்திற்கு முன் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
இந்திய கடற்படையை சேர்ந்த அபிலாஷ் டாமி கோல்டன் குளோப் ரேஸ் என்று அழைக்கப்படும் தனிநபர் ரேஸில் கலந்து கொண்டார். இந்தியாவில் இருந்து இந்த ரேஸில் கலந்து கொண்ட முதல் நபர் இவர்தான்.
தனிநபர் படகு மூலம் கடலில் 30,000 நாட்டிக்கல் மைல்கள் (கடலில் தூரம் அளவிட பயன்படும் அலகு) செல்ல வேண்டும் என்பது இந்த போட்டியாகும். இதில் கலந்து கொண்ட அபிலாஷ் டாமி விபத்து காரணமாக நடுக்கடலில் சிக்கி தவித்து வந்தார்.
யார் இவர்
39 வயது நிரம்பிய அபிலாஷ் டாமி இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது கோல்டன் குளோப் ரேஸ் 2018 போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதில் கலந்து கொண்ட முதல் இந்தியர் இவர்தான். கடந்த ஜூலை 1ம் தேதி இந்த போட்டி தொடங்கியது. இவர் கீர்த்தி சக்ரா விருது வாங்கியவர்.
எவ்வளவு தூரம்
ஜூலை 1 தொடங்கிய இந்த போட்டி வீரர்கள் 30,000 நாட்டிக்கல் மைல்களை தனியாக, தனி நபர் கப்பலில் கடக்கும் வரை நடக்கும். கடந்த 84 நாட்களில் இவர் மொத்தம் 10,500 நாட்டிக்கல் மைல்களை தனியாக கடந்து இருக்கிறார். இந்த போட்டியில் இப்போதுவரை இவர் மூன்றாவது இடத்தில் இருந்துள்ளார்.
என்ன ஆனது
இந்த நிலையில் இவர் இந்திய பெருங்கடலில் இருந்து 2000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போது, கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி உள்ளார். அப்போது வீசிய மோசமான புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக இவரது கப்பலில் சில பகுதி நொறுங்கி இருக்கிறது. அதில் காயம்பட்ட இவருக்கு முதுகெலும்பில் சில பகுதிகள் உடைந்து உள்ளது. அதேபோல் கை எலும்பும் உடைந்து இருக்கிறது.
முதுகு எலும்பு
இவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்ட காரணத்தால் அப்படியே படுத்த படுக்கையாகி உள்ளார். அடுத்த நிமிடம் இவர் தொடர்பும் அற்று போய் உள்ளது. இவர் கொண்டு சென்ற உணவுகள் தீர்ந்து போய் இருக்க வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டது. கடலில் இருப்பதால், இவர் உடலில் நிறைய குறைபாடுகள் இதனால் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேடினார்கள்
இந்த நிலையில்தான் இந்திய கடற்படை இவரை மீட்க களமிறங்கியது. ஆனால் வெள்ளிக்கிழமை காணாமல் போன இவர் இரண்டு நாட்களாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திய விமான படையின் உதவியை இதனால் கடற்படை நாடியது. விமான படை ஆகாய மார்க்கமாக தேட, இந்திய கடற்படை கடலில் தேடியது. ஆனாலும் நேற்று காலை வரை இவர் கிடைக்கவில்லை.
தொடர்பு கிடைத்தது
இந்த நிலையில்தான் நேற்று இந்திய விமான படை இவரை கண்டுபிடித்தது. இந்திய பெருங்கடலில் குமரி முனையில் இருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தூரத்தில் இவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் இவர் முதுகெலும்பு சேதமடைந்து இருந்த காரணத்தால் இவரை விமானம் மூலம் மீட்க முடியவில்லை.
மூன்று நாடுகள்
இந்த நிலையில் இவரை மீட்க மூன்று நாட்டு கடற்படை களமிறங்கியது. இந்திய கடற்படை, பிரான்ஸ் நாட்டு கடற்படை, மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை களமிறங்கியது. மூன்று நாட்டு கடற்பகுதியில் எதற்குள் வேண்டுமானாலும் இவர் நுழைய வாய்ப்பு உள்ளது என்பதால் இவரை காப்பாற்ற மூன்று படைகளும் களமிறங்கியது. இவர்கள் கடந்த 48 மணி நேரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
உணவு கிடையாது
இவர் 24 மணி நேரமாக உணவு இன்றி கஷ்டப்பட்டு இருக்கிறார். வைத்திருந்த ஒரே ஒரு ஐஸ் டீயை இவர் குடித்துள்ளார். இதனால், இவர் தற்போது வாந்தி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் வைத்திருந்த தொலைத்தொடர்பு சாதனம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சாதனமும் பேட்டரி தீரும் நிலையில் இருந்துள்ளது.
மீட்கப்பட்டார்
இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு சரியாக இவர் மீட்கப்பட்டார். ஆஸ்திரேலிய நாட்டு படையின் உதவியுடன் இவர் மீட்கப்பட்டார். இவர் உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஆஸ்திரேலியாவில் முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு இந்தியா கொண்டு வரப்பட உள்ளார்.