திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தியது திமுக தான்: நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தியது திமுக தான் என்று அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது அதை திட்டமிட்டு தடுத்து நிறுத்த திமுகவினர் முற்பட்டனர் என்று அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்கட்சியான தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். அந்த கோரிக்கை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. தி.மு.க. உறுப்பினர் களை வெளியேற்றிய பின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். .
இந்நிலையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சட்டப்பேரவையில், நாடாளுமன்றத்தில் உள்ள விதிமுறைகளின் படி ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது. சபாநாயகர் முடிவை ஆளுநரிடமோ, நீதிமன்றத்திலோ முறையிட எந்தவித முகாந்திரமும் இல்லை.
தமிழக சட்டசபைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்த திமுகவினர் முற்பட்டனர். சட்டசபையில் சபாநாயகர் சட்டவிதிகளின்படி செயல்பட்டார். தீர்மானம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.