சந்தடி சாக்கில் லாலுவுடன் சசிகலாவை ஒப்பிட்டுப் பேசிய நவநீதகிருஷ்ணன்.. என்னாகப் போறாரோ!!
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் புகழ் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன், சந்தடி சாக்கில் வாய் தவறி லாலு பிரசாத் யாதவுடன், சசிகலாவை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கியவர் லாலு பிரசாத் யாதவ். இதற்காக சிறைக்கும் போனவர். கோர்ட் தீர்ப்பால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளவர். ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக இருக்கிறார் லாலு.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் நவநீதிகிருஷ்ணன். அப்போது தெரிந்தோ தெரியாமலோ ஊழல் குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத் யாதவுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதன் மூலம் மறைமுகமாக சசிகலாவும் ஊழல் குற்றவாளிதான் என்பதையும் அதிமுக முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, லாலு பிரசாத் யாதவ் கூட குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவர்தான். அவர் கட்சித் தலைவராக இல்லையா. அது போலத்தான் சசிகலாவும், அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறார் என்று கூறினார்.
நவநீதகிருஷ்ணன் பேச்சை சசிகலா குடும்பம் எந்த அளவுக்கு ரசிக்கும் என்று தெரியவில்லை. சொல்ல முடியாது. சரியான பாயிண்ட்டைப் பிடித்துப் பேசி விட்டார் என்று பாராட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.