பழனி நவபாஷாண தண்டாயுதபாணியும்... பஞ்சாமிர்த பிரசாதமும்
பழனி தண்டாயுதபாணி கோவில் ஐம்பொன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் கைதாகியுள்ளார் ஸ்தபதி முத்தையா. நவபாஷாண சிலை நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
Recommended Video
சென்னை: பழனியில் மூலவராக உள்ள நவபாஷாண முருகனை அபிஷேகம் செய்து வரும் பிரசாத தீர்த்தத்தை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. பழனி ஐம்பொன் சிலை செய்ததில் தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நவபாஷாண தண்டாயுதபாணியைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3வது படை வீடான பழநி கோயிலில், மூலவர் தண்டாயுதபாணி சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் தண்டாயுதபாணியைக் காண தமிழக மக்களும், மலையாள மொழி பேசும் மக்களும் வருகின்றனர்.
பழநி கோயில் மீது செவ்வாய்கிரகத்தின் நேரடி பார்வை விழுவதால், இந்த கோயில் சிலை அரசுக்கும் ஆள்பவர்களுக்கும் உகந்ததாக புராண காலத்தில் இருந்தே ஐதீகமாகக் கூறப்படுகிறது.
நவகிரகங்களின் அருள்
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.
நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. நவக்கிரகங்களின் சக்தியை இந்த சிலைகள் பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
சித்தர் உருவாக்கிய சிலை
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
தண்டாயுதபாணி பிரசாதம்
நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
சந்தன பிரசாதம்
போகர் கூடு விட்டு கூடு பாயும் வித்தை கற்றவர். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சித்தர்கள் சுவாமி சிலை செய்தனர்.
ஸ்தபதி கைது
பழனி கோவில் மூலவர் தண்டாயுதபாணிக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் அருமருந்தாகிறது. மூலவர் பக்கத்தில் வைப்பதற்காக செய்யப்பட்ட ஐம்பொன் சிலையால் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சிலையை செய்த ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டுள்ளார்.