அப்துல் கலாம் முதல் அம்மா வரை... மயிலை மாட வீதிகளில் களை கட்டும் நவராத்திரி பொம்மைகள்
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பலவகையான பொம்மைகள் மயிலாப்பூர் மாட வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னை: மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொம்மை முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொம்மை வரை மயிலாப்பூர் மாட வீதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி 10 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்காக வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிப்படுவது வழக்கம். மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் விற்பனைக்காக விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
அம்மனுக்கு அலங்காரம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை வணங்கும் முறையும் கடைபிடிக்கப்படுகிறது. முதல்நாள் மகேஸ்வரி, இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி, மூன்றாம் நாள் வராகி, நான்காம் நாள் மகாலட்சுமி, ஐந்தாம் நாள் மோகினி வடிவம், ஆறாம் நாள் சண்டிகா தேவி, ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை, எட்டாம் நாள், நரசிம்ம தாரிணி, ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி என ஒன்பது நாட்களும் ஒன்பது அம்மன் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
கொலு கொண்டாட்டம்
சென்னை ஆலயங்களில் கொலு
இந்தாண்டும் நவராத்திரி விழாவையொட்டி, கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டு, விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர் உள்ளிட்ட 7 சிவாலயங்களில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
கலைநிகழ்ச்சிகள்
கோவில்களில் கொலு அலங்காரம் ஒரு புறம் இருக்க மறுபக்கம் மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு கண்கவர் விருந்தாக அமைந்துள்ளது. நடனம், பாட்டுக்கச்சேரி,பார்த்து ரசித்துக்கொண்டே மறுபக்கம் சூடான சுண்டல்களையும் ரசிக்கத் தவறுவதில்லை.
மாட வீதிகளில் பொம்மைகள்
கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து மயிலாப்பூருக்கு வந்து பொம்மைகளை வாங்கிச் செல்வதால் மாடவீதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
வித விதமான பொம்மைகள்
வழக்கம்போல தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, கிரிக்கெட், அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கச்சேரி, பொங்கல், கிருஷ்ண லீலா, கார்த்திகை பெண்கள், கள்ளழகர், மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், குபேர லட்சுமி என வகைவகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
அப்துல்கலாம் முதல் அம்மா வரை
மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், ஃபைபர், பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், டெரகோட்டா ஆகியவற்றிலும் செய்யப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், பாரதியார், திருவள்ளுவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என பல தலைவர்களின் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா
இந்த ஆண்டு கொலுவிற்கு சாமி சிலைகளை விட அதிகம் விற்பனையானது ஜெயலலிதா உருவபொம்மைதானாம். மாட வீதிகளில் விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஏராளமானோர் ஜெயலலிதா பொம்மையை கேட்டு வாங்கி சென்று விட்டனராம். ஜெயலலிதாவிற்கு பிடித்தமான பச்சை வண்ணம், மெரீன் வண்ணத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
பரிசுப்பொருளாக பொம்மை
சாமி சிலைகள் தவிர கிரிக்கெட், விவசாயம், கிராமிய பெண்கள், கிராமத் தொழில்கள், பாக்சிங் என பல்வேறு வகைகளில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கோயில்கள், வீடுகளில் கொலு வைப்பதற்காக மட்டுமின்றி, பரிசுப் பொருளாக வழங்கும் இந்த பொம்மைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர்.
|
நட்பும் உறவும் அதிகரிக்கும்
நீண்டநாள் பேசாமல் இருக்கும் நண்பர்கள் கூட வீட்டில் கொலு வைத்திருந்தால் அழைக்காமல் இருக்கத் தவறுவதில்லை. கையில் ஒரு அழகான பொம்மையுடன் நண்பர்கள் வீட்டு கொலுவை பார்க்கப் போவது தனி மகிழ்ச்சிதான் போங்கள். நவராத்திரி அம்மனுக்கு உகந்த பண்டிகை மட்டுமல்ல. நட்பையும், உறவையும் உற்சாகப்படுத்தும் பண்டிகை என்பது அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.