நவராத்திரி: கலாம், ஜெயலலிதா, பண மரம், ஏடிஎம் இந்த ஆண்டு ஸ்பெஷல்
நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்கியது. இந்த ஆண்டு கொலுவில் அப்துல் கலாம், ஜெயலலிதா, பணம் காய்க்கும் மரம், ஏடிஎம் ஆகியவை கொலுவில் இடம் பெற்றுள்ளது.
சென்னை: இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியுள்ளது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக வைக்கப்பட்டுள்ள கொலுவில் அப்துல் கலாம், ஜெயலலிதா பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் முக்கிய கோவில்களிலும், இல்லங்களிலும் கொலு வைத்து வீடுகளை அலங்கரித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பணமதிப்பு நீக்கத்தின் வேதனைகளை உணர்த்தும் வகையில் பணம் காய்க்கும் மரம், ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி கொலுவில் விதவிதமாக, அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் இடம்பெறுவது வழக்கம். கடவுளர் உருவங்கள், மகான்கள், தலைவர்கள், மக்களின் வாழ்வியலைக் காட்டும் உருவங்கள் எனப் பல விதமான பொம்மைகள் கொலுவில் வைக்கப்படும். கடந்த ஆண்டு கொலு பொம்மைகளில் பாகுபலி பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.
கொலுவில் தலைவர்கள் சிலை
அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் சிலைகள் விற்பனைக்கு வந்தன. அவற்றை வைத்து சுதந்திரப் போராட்ட காட்சிகளை கொலுவில் வைத்தார்கள்.
ஜெயலலிதா பொம்மை
இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொம்மை விற்பனைக்கு வந்துள்ளது. பச்சை, சிவப்பு என விதவிதமான வண்ணங்களில் சிலைகள் விற்கப்படுகின்றன
கொலுவில் கற்பனை
கொலு வைப்பதற்கென சில வரையறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆயினும் இளம் தலைமுறை, தங்கள் கற்பனைக்கேற்ப விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்து வித்தியாசமான கொலுக்களை அமைக்கிறார்கள்.
துர்கா பூஜை
மேற்கு வங்க மாநிலம் முழுவதும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிரமாண்ட துர்கா சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பணமதிப்பு நீக்கம்
இந்த ஆண்டு துர்கா பூஜையில் மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும் அதனால் மக்கள் பட்ட அவதி குறித்த காட்சிகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. கொல்கத்தாவின் பேலிகாடா பகுதியில் செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டு மாதிரியில், பணம் காய்க்கும் மரத்தை வடிவமைத்துள்ளனர்.
|
ஏடிஎம் மிஷின்கள்
பண மரத்தின் பொதுமக்கள், கண்ணீர் விட்டு அழுவது போன்ற சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏடிஎம் மிஷின்கள் போன்ற சிலைகளை வைத்து, செல்லாத ரூபாய் நோட்டால் ஏற்பட்ட பாதிப்பை சித்தரித்துள்ளனர்.
வித விதமான சுண்டல்
மாலையில் கொலு முன்பாக பூஜை செய்து பக்திப்பாடல்களைப் பாடி அம்மனுக்கு விதம் விதமான சுண்டல்களை படைத்து வழிபட்டு அனைவரும் கொடுத்து மகிழ்வார்கள்.