சக்தி தரும் திருவிழாக்கள்… ஆயுதபூஜை, விஜயதசமி
சென்னை: நவராத்திரி கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும் களை கட்டியுள்ளன. கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர் மக்கள்.
கொலுவை காண வருபவர்களுக்கு கண்ணுக்கும், காதுக்கும் இனிமையாய் கலை நிகழ்ச்சிகளும், சுவைக்க ருசியான சுண்டல்களும் கிடைக்கின்றன. இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் அழகுற உடுத்தி, அம்மனைப் போல அலங்காரமாய் கோவில்களில் வலம் வருவதை காணமுடிகிறது.
சக்தி வழிபாடு
சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. சக்தி என்றால் பெண் என்ற பொருள் உண்டு. நவராத்திரி தினங்களில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.
கொலு வைத்து கொண்டாட்டம்
கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை பாட்டு, நாட்டியம் என அரங்கேற்றுகின்றனர். இதனால் தெய்வநம்பிக்கை அதிகரிப்பதோடு கலைகளும் வளர்க்கப்படுகிறது.
தன்னம்பிக்கை அதிகரிப்பு
பெண்களிடம் கொலு பொம்மைகள் அழகுப்படுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.
சுண்டல்கள்… பழங்கள்
அதோடு ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பெண்கள்.
மருத்துவ ரீதியான உண்மை
இந்திய தட்பவெப்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகிறது.
நலம் தரும் நவராத்திரி
புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது.
முப்பெரும் தேவியர்
ஆன்மீக ரீதியாக காணும் போது கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொழில் போற்றும் ஆயுதபூஜை
இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வெற்றி தரும் விஜயதசமி
விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இதிகாசங்களில் விஜயதசமி
ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
சீதையை தேடிச் சென்ற ராமர், சண்டி ஹோமம் செய்து அன்னை துர்காவின் அருளை பெற்று, ராவணாசுரனை இந்த விஜயதசமி நாளில் வதம் செய்தார். காமம், கோபம், தவறான வழி, பேராசை, கர்வம், பொறாமை, மன கட்டுபாட்டின்மை, ஞானமின்மை, மனஉறுதி இன்மை, அகங்காரம் இந்த பத்து தீய குணங்களே ராவணனின் அம்சமாக கருதப்படுகிறது. அருளின் வடிவமான ராமபிரான் விஜயதசமி நாளில் இந்த பத்து தீமைகளையும் அழித்தார் என்று இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.