“மூன்று முடிச்சு” பாணியில் நண்பரால் நடுக்கடலில் தள்ளி விடப்பட்ட மீனவர்... ரோந்து வீரர்கள் மீட்டனர்!
சென்னை: மீன் பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட மோதலால், நண்பரால் நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட மீனவரை கடற்படை ரோந்து வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நாகை நம்பியார் நகரை சேர்ந்த மீனவர் சிந்துராஜ் (64). இவர் தனது நண்பருடன் மீன் பிடிப்பதற்காக ஒரே படகில் கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிந்துராஜுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர் சிந்துராஜை படகில் இருந்து கடலில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் சிந்துராஜ் கடலில் தத்தளிப்பதைக் கண்டும் மனம் இறங்காமல் தனது படகை எடுத்துக் கொண்டு வேறுபக்கம் சென்றுள்ளார்.
இதனால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார் சிந்துராஜ. இதனை நாகை கடல் பகுதியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் கடற்படை அதிகாரி எஸ்.மாண்டல் தலைமையில் சென்ற கடற்படை ரோந்து வீரர்கள் கண்டனர்.
உடனடியாக சிந்துராஜ் அருகில் சென்ற வீரர்கள், உயிர் காக்கும் மிதவையை வீசி சிந்துராஜை பத்திரமாக மீட்டனர். நீரில் தத்தளித்த படியே இருந்ததால், பசியாலும், அதிக களைப்பாலும் சோர்வாக இருந்த சிந்துராஜுக்கு அவர்கள் குடிநீரும், பிஸ்கெட்டும் கொடுத்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிந்துராஜ் கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடற்படை ரோந்து வீரர்கள் உடனடியாக செயல்பட்ட காரணத்தால், கடலில் மூழ்கி கொண்டிருந்த சிந்துராஜ் காப்பாற்றப்பட்டு, பத்திரமாக கரை திரும்பினார்.
இந்தத் தகவல் இந்திய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.