மதுரையில் நக்சலைட்கள் ஊடுறுவல்?.. பைப் குண்டு விவகாரத்தில் புது திருப்பம்!
மதுரை: மதுரையில் நக்சலைட்கள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது, பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த குண்டை வைத்தது நக்சலைட்கள் என்று போலீஸார் கண்டுபிடித்துள்ளனராம்.
மதுரை உத்தங்குடியில் ஒரு சூப்பர் மார்க்கெட் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் குதித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக வெடிகுண்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் அந்த குண்டு சக்தி வாய்ந்தது என்று தெரிய வந்தது.
சென்னையிலிருந்து வந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸ் படையினரும், அதேபோல புதுச்சேரியிலிருந்து வந்த தேசிய புலனாய்வு ஏஜென்சியினரும் இந்த வெடிண்டை ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் நாராணசாமி வீடு அருகே வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் விசாரித்து வருகிறது.
இந்த வெடிகுண்டானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும் என்று சொல்கிறார்கள். இதன் எடை ஏழரை கிலோவாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜசெல் வெடிபொருள் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. வெடித்தால் 400 மீட்டர் தூரத்துக்குப் பெரும் சேதம் ஏற்படுமாம்.
ஒரு வேளை அந்த வெடிகுண்டு சூப்பர் மார்க்கெட்டில் வெடித்திருந்தால் அந்த சூப்பர் மார்க்கட்டே தரைமட்டமாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த குண்டை வைத்தது நக்சலைட்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலான தகவல்கள் கிடைத்துள்ளதாம். எனவே நக்சலைட் ஆதரவாளர்களிடமும், அதுதொடர்பானவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறதாம்.