சென்னை அருகே நக்சலைட்டுகள் ஊடுருவல்? தமிழக-ஆந்திர எல்லையில் தீவிர கண்காணிப்பு
தமிழக ஆந்திர எல்லையோர வனப்பகுதிகள் வழியாக சென்னை அருகே நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. . இதனால் தமிழக ஆந்திர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள பூண்டி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீசார் தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையில், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 14 வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் எல்லையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், சுதந்திர தினத்தையொட்டி நக்சலைட்டுகளை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள நக்சல் அமைப்பினர், தமிழக வனப்பகுதிக்குள் பதுங்க உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இருமாநில எல்லையோர வனப்பகுதி மற்றும் மலைப் பகுதிகளில், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க, தமிழக அரசு கடந்த டிசம்பர் 5ம் தேதி தீவிர நக்சல் தடுப்பு தனிப்பிரிவை உருவாக்கியது. அதன் மூலம் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்திலும் தமிழக - ஆந்திர எல்லையான பூண்டி காப்புக்காடு, குடியம் மலைப்பகுதி, அல்லிக்குழி, பிளேஸ்பாளையம், ராஜபாளையம், சென்றாயன்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் தொடங்கி பள்ளிப்பட்டு வரை வனப்பகுதி உள்ளன.
இங்கு, மான்கள், முயல்கள், குள்ளநரி, முள்ளம்பன்றி, காட்டுபன்றி, உடும்பு மற்றும் அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் வருவதாலும், காப்புக் காட்டில் செம்மரங்கள் கடத்தப்படுவதாலும், நக்சலைட்டுகள் யாராவது காட்டிற்குள் பதுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வனப்பகுதிகளில், திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 13 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்று கண்காணித்து வருகின்றனர்.