தென் மாநிலங்களில் நக்சலைட் செயல்பாடுகளை அதிகரிக்க தமிழகம் வழியாக ஆயுதம் சப்ளை!
சென்னை: தென் மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாத இயக்கத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள அவ்வமைப்பினர், இதற்கான ஆயுதங்களை தமிழகத்தின் வழியே பெறுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தென் மாநிலங்களில், ஆந்திராவில்தான் முன்பு, நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் படிப்படியாக நக்சலைட் நடமாட்டம் குறைக்கப்பட்டு, பலரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவின் உடுப்பி, சிக்மகளூர், குடகு போன்ற மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
அந்த இயக்கம், தனது சிறகை கேரளாவுக்கும் விரித்துள்ளது. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல், உளவுத்துறைக்கு, கேரளா மீதான பார்வையை ஈர்த்துள்ளது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு தென் மாநிலங்கள் முழுவதிலும் தீவிரவாதத்தை பரப்ப வேண்டும் என்பதுதான் நக்சல்வாதிகளின் திட்டமாக உள்ளது.
நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை சோதித்து பார்த்தபோது, அவை சீனாவை சேர்ந்தவை என்று தெரியவந்தன. சீன நாட்டு ஆயுத கடத்தல் கும்பல், இலங்கை வழியாக, தமிழகத்திற்கு இவ்வாயுதங்களை கொண்டுவந்ததும், அவற்றை கேரள நக்சல்கள் பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஆந்திராவின் தண்டகாருண்யம் என்ற இடத்தில் நக்சலைட்டுகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழகத்தை சேர்ந்த நக்சல் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கர்நாடக காபி தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மூளைச்சலவை செய்து அவர்களையும் நக்சல்களாக மாற்ற முயற்சி நடப்பதாகவும் எச்சரிக்கிறது உளவுத்துறை.
பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தாமல் ஆங்காங்கு சிறுசிறு தாக்குதல்களை நடத்தி மக்கள் மத்தியில் பயத்தையும், தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையையும் விதைப்பதே நக்சலைட்டுகளின் நோக்கமாக உள்ளதாக கூறுகின்றனர் உளவுத்துறையினர்.