அனிதா தற்கொலைக்கு காரணம் என்ன? தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரி பேட்டியால் பரபரப்பு
அரியலூர் மாணவி அனிதா தற்கொலையில் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறியுள்ளார்.
சென்னை : மருத்துவ இடம் கிடைக்காமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன் கூறியதாவது : அனிதா தற்கொலை குறித்து விசாரிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் கோர உள்ளோம். நீட் தேர்வில் தோல்வியடைந்து மருத்துவ இடம் கிடைக்காத சோகத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.
அனிதா மரணம் குறித்து அரியலூரில் உள்ள அவருடைய தந்தை மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
வேறுபடிப்புக்கும் முயன்றார்
அனிதா மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்பதால் பிவிஎஸ்சி(கால்நடை படிப்பு)யில் சேர்ந்திருக்கிறார். இது இல்லாமல் அக்ரி(விவசாயம்), எம்டியில் ஏரோநாடிகல் என்ஜினியரிங் படிப்பில் சேரவும் விண்ணப்பித்துள்ளார், அதற்கான அழைப்பாணையும் அவருக்கு வந்துள்ளது.
அழுத்தம் கொடுத்துள்ளார்கள்
அனிதா தன்னை பிவிஎஸ்சி படிக்க தயார்படுத்திக்கொண்டிருந்துள்ளார். அப்படியிருந்த சூழலில் அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது. தற்கொலைக்கு யாராவது தூண்டினார்களா அல்லது வெளியில் இருந்து அழுத்தம் தரப்பட்டதா என்று விசாரணைக்குமாறு மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளேன். அனிதாவிற்கு வெளியில் இருந்து ஏதோ ஒரு சக்தி அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியுள்ளதாகவே நான் சந்தேகப்படுகிறேன்.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவை என்று தான் நான் கருதுகிறேன். 1996 - 97 காலகட்டத்தில் அனைவருக்குமே பொது நுழைவுத் தேர்வு இருந்தது. நீட் என்பது இன்றைய நிலையில் கட்டாயம் தேவை. மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 8ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையே தமிழக அரசும் செய்ய வேண்டும்.
அறிக்கை தாக்கல்
நீட், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு செய்ய வேண்டும். தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியுள்ளேன், நுழைவுத் தேர்வுகளைப் பற்றி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எந்த புரிதலுமே இல்லை. இதனை மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அனிதா மரணம் குறித்து முழுவதும் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றார்.