நாளை முதல் வட கிழக்குப் பருவ மழை....?
சென்னை: தமிழகத்தில் 22ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என்று வானிலை மையம் கணிததுள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக நாளையே அது தொடங்கலாம் என்று தெரிகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக முன்கூட்டியே நாளையே வட கிழக்குப் பருவ மழை தொடங்கக் கூடும் என்று தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து வானிலை மையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
தென் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.