அக்டோபர் 26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்... வானிலை மையம் தகவல்!
அக்டோபர் 26 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அக்டோபர் 26 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா ள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவ மழை சக்கை போடு போட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் இந்த மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது : தென்மேற்குப் பருவமழை அக்டோபர் 24,25 தேதிகளில் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
எனவே அக்டோபர் 27 முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. கடலூரில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.