18 வருடத்தில் இப்படி ஒரு 'மோசமான' மழையைப் பார்த்தே இல்லை தமிழகம்...
சென்னை: கடந்த 18 வருடங்களில் இப்படி ஒரு ஏமாற்றம் மிகுந்த வட கிழக்குப் பருவமழையை தமிழகம் கண்டதில்லையாம். அந்த அளவுக்கு மழை பொய்த்துப் போய் விட்டது.
கடந்த 18 வருடங்களில் இல்லாத அளவுக்கு 2013ல் வட கிழக்குப் பருவ மழை ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது.
தமிழகத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட இந்த ஆண்டு 29.5 செமீ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக பெய்ய வேண்டிய 43.5 செ.மீ
வழக்கமாக வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் தமிழகத்தில் 43.5 செ. மீ மழை பெய்யும்.
பெய்தது 32 செமீ.தான்
ஆனால் இந்த ஆண்டு இதுவரை 32 சதவீத மழை தான் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.
பற்றாக்குறை 29.5 செமீ.
இதன் மூலம் தமிழகத்தில் இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 29.5 செ.மீ ஆகும்.
சோக மழை
வழக்கமாக வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குறிப்பாக சென்னை போன்ற குடிநீருக்காக ஏங்கும் மக்களும் பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இந்த முறை மழை ஏமாற்றி விட்டது.
26ம் தேதியுடன் முடிந்தது
அக்டோபர் 1ம் தேதி இந்த முறை பருவ மழை தொடங்கியது. டிசம்பர் 26ம் தேதியுடன் இது முடிவடைந்துள்ளது. இனி மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
1995ல் இதே நிலை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஒய்.இ.ஏ ராஜ் கூறுகையில் கடந்த 1995ம் ஆண்டு இதேபோல பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது 46 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் பின்னர் 32 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை போனதில்லை என்றார்.
2000மாவது ஆண்டில் சற்று அதிகம்
கடந்த 2000மாவது ஆண்டில் 28 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டது. 2001ல் 21 சதவீதம் ஏற்பட்டது.
2001 முதல் நல்லாத்தான் பெய்தது
2001 முதல் தமிழகத்திற்கு வட கிழக்குப் பருவ மழைக்காலம் நன்றாகவே இருந்துள்ளது. 2012 வரை பற்றாக்குறை ஏற்படவில்லை.
5 மாவட்டங்கள் பரவாயில்லை
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழைக்காலத்தில் தர்மபுரி,கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, நெல்லை மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 40 சதவீதம்
சென்னையில்தான் அதிக பற்றாக்குறை இம்முறை. அதாவது 40 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இங்கு 77 செ. மீ மழை பெய்யும். ஆனால் இந்த முறை 46.4 சதவீத மழைதான் பெய்துள்ளது.
வடக்கிலிருந்து வந்த குளிர்காற்றே காரணம்
இந்த முறை வடக்கிலிருந்து குளிர் காற்று சீக்கிரமே வீசத் தொடங்கியதுதான் பற்றாக்குறை மழைக்குக் காரணம் என்கிறார்கள்.