வட கிழக்குப் பருவ மழை லேட்டானாலும் "ரகளை"யாக இருக்குமாம்!
சென்னை: வட கிழக்குப் பருவ மழை இன்னும் தமிழகத்தில் தொடங்கவில்லை. வழக்கமாக 20ம் தேதி தொடங்க வேண்டிய மழை தாமதமாகி வருகிறது. ஆனால் மழை லேட்டானாலும், மழையின் அளவு குறையாது என்று வானிலை ஆராய்ச்சியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி வட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கும். கடந்த ஆண்டு பெய்த பேய் மழையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதை நினைத்து இந்த ஆண்டும் அதேபோல இருக்குமோ என்ற அச்சத்திலும் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மழை பெய்வது தாமதமாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வழக்கமாக வட கிழக்குப் பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கும். ஆனால் தற்போது கடல் மட்டத்தில் ஈரப்பதம் குறைவாக உள்ளது. இதனால்தான் மழை தொடங்குவது தாமதமாகியுள்ளது.
அனேகமாக அக்டோபர் 28ம் தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளது. மழை தாமதமானாலும் கூட மழையின் அளவில் குறையிருக்க வாய்ப்பில்லை. ஒரே நாளில் 45 செமீ அளவுக்குக்கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை அளவு இயல்பான அளவிலேயே இருக்கும் என்று செல்வம் கூறியுள்ளார்.