15 கிமீ போய் சரக்கு வாங்கி குடிக்கிற நிலைமை வந்துருச்சே.. புலம்பும் 'கன்னிவாடி' குடிகாரர்கள்!
திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் குடிமகன்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று சரக்கு வாங்கி குடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கன்னிவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குடிமகன்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று சரக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் வைக்க அரசு முயன்று வருகிறது. இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதுக்கடைக்கு எதிர்ப்பு
இதனால் பல்வேறு கிராமங்களிலும் சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அலைமோதும் கூட்டம்
இதனால் திறந்திருக்கும் ஒரு சில கடைகளில்தான் குடிமகன்கள் சரக்கு வாங்கி குடித்து வருகின்றனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
15 கி.மீ செல்லும் குடிகாரர்கள்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ள மதுக்கடை உச்சநீதிமன்ற தீர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குடிமகன்கள் 15 கி.மீட்டர் தூரத்திலுள்ள திண்டுக்கல், சின்னாளபட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போய் தான் சரக்கு வாங்கி வருகிறார்கள்.
கூடுதல் விலைக்கு விற்பனை
ஒரு குடிமகன் சரக்கு வாங்க போகும்போது மற்ற குடிமகன்களுக்கும் சேர்த்தே மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதிகளில் உள்ள புளியமரத்தடியிலும், தென்னந்தோப்பு அடியிலும் ஒன்றுகூடி உட்கார்ந்து குடித்துவிட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் திறந்திருக்கும் ஒரு சில கடைகளிலும் சரக்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குடிகாரார்கள் புலம்பல்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில்தான் குடிகார்களுக்கான சங்கம் உள்ளது. குடிகாரர்களுக்கு என தனி சங்கம் வைத்தும் அங்கு மதுக்கடை இல்லாதது அப்பகுதி குடிமகன்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னவாடி பகுதியில் மதுக்கடைகளை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.