கோயில் சுவர் கட்டுவது தொடர்பாக மோதல்.. பைக்குகள் சூறை.. நாற்காலி வீச்சு..69 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை அருகே கோயிலில் சுவர் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 69 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகே கோயிலில் சுவர் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பைக்குகள், நாற்காலிகள் அடித்த நொறுக்கப்பட்டன. ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர் இதுதொடர்பாக 69 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை அருகே செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ரங்கராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயில் இருக்கும் பகுதி சற்று மேடாக இருந்ததால் சப்பரத்தை எடுத்து் செல்தவற்காக கோயிலின் முன்புறம் சிறிய தளம் அமைக்க பக்தர்கள் முடிவு செய்திருந்தனர்.
தளம் கட்டினால் அப்பகுதியில் பொது நிலத்தை பயன்படுத்துவதில் இடையூறு ஏற்படும் என்று அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் கோயிலின் முன்புறம் முகப்பு மண்டபப்பகுதியில் சிறிய தளம் அமைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட தளம் மிகவும் உயரமாக இருப்பதால் அதில் ஏறுவதற்காக படிக்கட்டுகளை அமைக்கும் பணியை துவங்கினர். சமாதான கூட்டத்தில் தளம் அமைக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேறு பணிகள் செய்ய கூடாது என ஒரு பிரிவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பு தகராறாக மாறவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டதன. பதற்றம் காரணமாக அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
இது தொடர்பாக எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவு பெரியவர்களும் சமாதான பேச்சு வார்த்தை நடத்த கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.