திருப்பூரில் நடுரோட்டில் கழுத்தறுபட்டு கிடந்த பெண்... காரணம் என்ன?
திருப்பூர் புறவழிச்சாலையில் பெண் ஒருவர் கழுத்தறுபட்ட நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே புறவழிச்சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்துள்ளது. அந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
திருப்பூர் அருகே கோவை - ஈரோடு புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த உடலின் அருகே ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை அழுதபடி இருந்தது.
இதனைப் பார்த்த சிலர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து அங்கே வந்த போலீசார் உடனடியாக பெண் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், அங்கிருந்த குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கழுத்து அறுபட்ட இருந்த பெண்ணும், அருகில் இருந்த குழந்தையும் யார் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.