சேர்ந்து வாழ மறுத்த கணவர்.. அடித்தே கொன்ற மனைவி.. உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி
உளுந்தூர் பேட்டை அருகே சேர்ந்து வாழ மறுத்த கணவரை மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர் பேட்டை அருகே சேர்ந்து வாழ மறுத்த கணவரை மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவியை கைது செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்தவர் சீமோன். 44 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவரது மனைவி ஜோஸ்பின்மேரி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ஜோஸ்பின்மேரி தன் கணவரை அடிக்கடி சந்தித்து ஒன்றாக குடும்பம் நடத்துவோம் என பலமுறை கூறி வந்துள்ளார்.
சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை
அதற்கு சீமோன் ஒத்துவரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சீமோன் தனது வயலில் வேலைபார்த்து கொண்டிருந்தார். ஜோஸ்பின்மேரியும், சீமோனின் தம்பி ஜான்பீட்டரும் அங்கு வந்தனர்.
உருட்டுக்கட்டையால் தாக்கிய மனைவி
ஜோஸ்பின்மேரி தன் கணவரை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இதற்கு சீமோன் மறுத்ததால் அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜோஸ்பின்மேரியும், ஜான்பீட்டரும் உருட்டுக்கட்டையால் சீமோனை தலையில் தாக்கினர்.
பலியான சீமோன்
இதில் சீமோன் தலையில் பலத்த காயமடைந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சீமோனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சீமோனுககு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.இருப்பினும் சீமோன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
மனைவி, மைத்துனர் கைது
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோஸ்பின்மேரி மற்றும ஜான்பீட்டர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேர்ந்து வாழ மறுத்த கணவனை மனைவியே கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.