பழ. நெடுமாறன் சிறையிலடைப்பு... வைகோ, சீமான் கைதில்லை
திருச்சி: முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்திய உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரையும் போலீஸார் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தி பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.
அதேசமயம், இதே காரணத்திற்காக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரையும், பூங்காவையும் போலீஸார் பொக்லைன் வைத்து இடித்துத் தள்ளி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினர். இதைத் தடுத்தும், எதிர்த்தும் போராட்டம் நடத்திய பழ. நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் கைது செய்யப்பட்டு கீழவாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அனைவரையும், தூய வளவனார் பள்ளிக்கு மாற்றினர்.
இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு வைத்து நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் 83 பேரையும், 27ம் தேதி வரை 14 நாள் திருச்சி சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நெடுமாறன் உள்ளிட்டவர்கள் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வைகோ- சீமான் விடுவிப்பு
அதேசமயம், வைகோ, சீமான் ஆகியோரை போலீஸார் விடுவித்துள்ளனர். அவர்களைக் கைது செய்யவில்லை.
வைகோ, சீமான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வைகோ மிகவும் ஆவேசமாக பேசினார். இவர்களை தனியார் பள்ளி ஒன்றில் போலீஸார் தடுத்து வைத்திருந்தனர். அவர்கள் மீதும் வழக்குப் பாயலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் நள்ளிரவுக்கு சற்று முன்பு வைகோ, சீமானையும் மற்றவர்களையும் அங்கிருந்து போகுமாறு காவல்துறை கூறி விட்டது. அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.