ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 174 நாட்கள் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சில நாள்கள் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயம் பாதிப்பு
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கினால் நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசுபடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆட்சியாளர்கள் உறுதி
இதைத் தொடர்ந்து பொதுமக்களின் விருப்பம் இன்றி அந்த இடத்தில் அப்பணிகள் நடைபெறாது என்று தமிழக அரசு உயரதிகாரிகளும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.
நம்ப வைத்து ஏமாற்றம்
இதைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 17 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது. இதற்கு நெடுவாசல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களிடம் வாக்குறுதி அளித்த நிலையில் மத்திய அரசு நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
மீண்டும் போராட்டம்
இதை கண்டித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்த போராட்டம் 100 நாள்களுக்கு மேலாகியும் இவர்களுக்கு தீர்வு ஏதும் காணப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
தற்காலிகமாக வாபஸ்
இந்நிலையில் 174 நாள்கள் நடைபெற்று வந்த நெடுவாசல் போராட்டம் தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.