100வது நாளை எட்டியது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்! மனம் மாறுமா அரசு?
நெடுவாசலில் ஹைட்ரோ காரபன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடி வரும் போராட்டமானது 100 -ஆவது நாளை எட்டியுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு நடத்தப்படும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை அடைந்தது.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடக்கத்தின்போதே...
இந்த திட்டமானது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதே மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர். எனினும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தமிழக முதல்வரும், மத்திய அ்மைச்சர் பொன் .ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர்.
போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
அதன்படி அப்பகுதி சுமார் 15 நாள்களுக்கு பிறகு தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் செய்வதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
மீண்டும் போராட்டம்
இதை கண்டித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். அமைதியாக அறவழியில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
100-ஆவது நாள்
இவர்களின் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியுள்ளது. இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறும் வரை ஓயமாட்டோம் என்று மக்கள் தெரிவித்தனர்.