தகிக்கும் நெடுவாசல்.. கடையடைப்பால் ஸ்தம்பித்தது புதுக்கோட்டை மாவட்டம் #saveneduvasal
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
மாணவர்களும், இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முழுகடையடைப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணிகர்களும் தங்களுடைய கடைகளை இன்று ஒருநாள் அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் போராட்டம்
இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது. புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட ஊர்களில் இருக்கின்ற 2000 கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் கசிவால் புற்றுநோய் ஏற்படுவதாக அச்சம் நிலவுகிறது. வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் தங்களுக்கு தேவையில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள் ஆதரவு
இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகளும், தொழிற்சங்கங்களும், வணிகர் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
14வது நாளாக போராட்டம்
நெடுவாசலில் 14வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. நெடுவாசலைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி, போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.