ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாதிரியே... நெடுவாசலையும் கலைக்கும் தமிழக அரசு?
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே நெடுவாசல் போராட்டத்தையும் கலைக்கும் முயற்சியில் தமிழக அரசு களமிறங்கியுள்ளது.
அலங்காநல்லூர் வாடிவாசலில் தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க சென்னை மெரினா கடற்கரையில் பல லட்சம் பேரவை இரவுபகலாக வாரக் கணக்கில் உட்கார வைத்தது.
அப்போது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டது. இதனால் போராட்ட களத்தில் இருந்த அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய சேனாபதி, ஆர்ஜே பாலாஜி என தேர்ந்தெடுத்து சிலரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.
தீவிரவாதிகள் பேச்சு
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்துவிட்டது; கோரிக்கை நிறைவேறிவிட்டது; போராட்டகாரர்களுடன் போய் பேசுகிறோம் என சேனாபதி வகையறாக்கள் சொல்லிவிட்டு போனார். ஆர்ஜே பாலாஜி தம் பங்குக்கு திடீரென தீவிரவாதிகளை மெரினா கூட்டத்தில் கண்டுபிடித்து பீதியை கிளப்பினார்.
அதேபாணி?
இப்படி உள்ளே இருந்து சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என அறிக்கை விட்டு கடைசியில் மாணவர்கள், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது அரசாங்கம். தற்போது நெடுவாசல் போராட்டத்துக்கும் அதே கதிதானோ என்ற நிலை உருவாகி உள்ளது.
11 பேர் குழு
நெடுவாசல் போராட்டத்தை தொடக்கம் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்த்து வருகிறார். இன்று 11 பேர் கொண்ட குழுவை அழைத்து முதல்வர் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தார்.
அதே மாதிரி பேச்சு
இந்த குழுவும் ஜல்லிக்கட்டு சேனாபதி குழு போலவே, பேசினோம்... உறுதி அளித்திருக்கிறார்... நல்ல செய்தி வரும்... போராட்ட களத்துக்குப் போய் பேசுகிறோம் என சொல்லியிருக்கிறது. இந்த குழு அளித்த பேட்டியைப் பார்த்தால் அரசாங்கம் என்ன சொல்ல விரும்பியதோ அதை சொல்வதாகவே மட்டும் இருக்கிறது.
அவ்வளவு தைரியமா தமிழக அரசுக்கு?
மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் கும்பிடுசாமி போட்டு கூழை கும்பிடு போடும் தமிழக அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடச் செய்யுமா? என்பது நிச்சயம் கேள்விகுறிதான். ஆகையால் நெடுவாசல் போராட்டத்தை முடித்து வைக்க எல்லா வகையான 'அரசாங்க' முகங்களை காட்டி வருகிறது தமிழக அரசு என்பதே நிதர்சனம்.