பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் தேவையில்லை.. நெடுவாசல் கிராமத்தினர் கருப்புக் கொடி
இயற்கை எரிவாயு என்ற பெயரில் வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் நடத்தும் பல்வேறு எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு வடிவமாக இன்று கருப்புக்
புதுக்கோட்டை: கடந்த மாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நெடுவாசல் கிராமம். இங்கு ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்க கர்நாடகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுத்துக் கொள்ள வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியால் நெடுவாசல் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
5000 மீட்டர் அளவிற்கு பூமியில் துளையிட்டு எடுக்கப்படும் இந்த எரிவாயு நெடுவாசல் கிராமத்தையே சுடுகாடாக மாற்றிவிடும் என்று கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்புக் கொடி
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்தால் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போராட்டத்தில் மாணவர்கள்
விவசாயத்தை முற்றிலும் அழிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கார்ப்பரேட்டுகளுக்கு எதிர்ப்பு
மத்தியில் ஆளும் பாஜக அரசு அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக கிராம விவசாயிகளை கொடுமைப் படுத்தி வருகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினார்கள். மத்திய அரசு திட்டமிட்டே இந்த வேலை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கைவிரித்த மத்திய அமைச்சர்
தமிழ்நாட்டை கொந்தளிப்பில் தள்ளியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தனது தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.