புதிய திராவிட இயக்கம், கன்னையாகுமார் போல உத்வேகத் தலைவன் தேவை- வாசகர்கள் கருத்து
சென்னை: திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு ஆக்கப்பூர்வமான புதிய திராவிட இயக்கம் தேவை என்று தமிழர் பண்பாட்டியல் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் தெரிவித்திருப்பது குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் முன்வைத்துள்ள கருத்துகள்:
மா. இளஞ்செழியன், அரசியல் சிந்தனையாளர்:
அய்யா தொ.பரமசிவம் மிகச் சிறந்த ஆய்வாளர். ஆனால், திராவிட இயக்கங்களை கலைத்து விட்டு, புதிதாக கட்டமைக்கலாம் என்று அவர் யோசனை கூறுகிறார். யாரை வைத்து, அதுபோன்ற புதிய இயக்கத்தை கட்டமைப்பது.
இப்போது இருப்பவர்களில் பலரும், இப்போதைய திராவிட இயக்கத்தின் தலைவர்களைவிட, குழப்பவாதிகளாகவும், சுயநலக்காரர்களாகவுமே இருக்கிறார்கள். புதிதாக திராவிட இயக்கத்தை கட்டமைக்கிறேன், பெரியார் கொள்கைகளை மீட்டெடுக்கிறேன் என்று கூறிக்கொண்டவர்களில் பலரும், கடைந்தெடுத்த அயோக்கியர்களாக இருக்கிறார்கள்.
அந்த கொள்கைகளுக்கு நேர்மையாய் இருப்பார்கள் என்று எண்ணக்கூடியவர்கள், மக்களை வென்றெடுக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், இப்போது இருக்கக் கூடியதில் ஓரளவு சரியான திராவிட இயக்கத்தையும் கலைத்து விட்டு என்ன செய்யச் சொல்கிறார் தொ.ப.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஓரளவு செயல்படுத்துகிறார்கள் என்பதற்கே, அவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது, அதுபோன்ற கட்சிகள் செல்வாக்குடன் இருக்கக்கூடாது என்று, திட்டமிட்டு, பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும், விலைபோன ஊடகங்களும், உளவுத்துறையும் செயல்படும் நிலையில், தொ.ப கூறுவது போல், இருப்பதை அழித்து விட்டு, புதிதாக கட்டமைப்பது என்பது, நடைமுறைக்கொவ்வாத கருத்தியலாக உள்ளது.
மாறாக, காலப்போக்கில், அவர் விரும்பக்கூடிய அல்லது நாம் விரும்பக்கூடிய மாற்றம் மலரும் என்பதே சரியான ஒன்று. அதுவரையில், இருக்கும் இயக்கங்களில், பெரியாரின் கொள்கைகளை யாரால் செயல்படுத்த முடியுமோ, யார் ஓரளவு செயல்படுத்துகிறார்களோ அவர்களை ஆதரிப்பதே மிகச் சரியான முடிவாக இருக்க முடியும்.
கார்த்திக் மகாலிங்கம்(வேல்முருகன் மஹாலிங்கம்)
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சரியான வழியில் மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் பலர் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களை தேடி ஊக்கபடுத்த வேண்டுமே தவிர இப்போதைய திராவிட இயக்கங்களை கலைத்து விடுவது சரியாக தோன்றவில்லை.
இங்கு கண்கூடாக நமக்கு தெரியும் திராவிட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பலரை மென்மேலும் ஊக்கபடுத்த வேண்டும்.
சுதாகர்:
நான் முற்றிலும் தொபவுடன் வுடன்படுகிறேன். திராவிடக்கட்சிகள் அதன் அரசியல் லாபத்திற்காக பெரியாரின் கொள்கைகளை பலியிடுகிறார்கள். இதற்காகத்தானே அன்றே பெரியார் அரசியலில் இருந்து விலகிருந்தார் .
பெரியாரின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் . இதற்கு முதலில் அனைத்துப் பெரியார் இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரே இயக்கமாக இணைக்கவேண்டும் .
கண்ணன்:
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. தற்போதைய திராவிட கட்சிகள் பெரியாரின் கொள்கைகளை பிரசாரம் செய்வதில்லை. பல முக்கியமான பிரச்சனைகளில் அமைதியாக இருந்து ஒரு ஆர். எஸ்.எஸ். பிரிவை போல இருந்து விடுகின்றனர்.
அப்படி அமைதியாக இருப்பதற்கு பதிலாக புதியவர்களைக் கொண்டு புதிய இயக்கம்தான் சரியாக இருக்கும்.
க. வேல்முருகன்:
தொ.பரமசிவன் அவர்கள் கூறியது முற்றிலும் சரி. திக, திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் விடுதலை கழகம் அனைத்தும் நீர்த்துப்போய் ஊழல் மயமாகிவிட்டது. யாருக்கும் கொள்கையில்லை. வாரிசு அரசியலை முன்னெடுத்து பணம் ஈட்டுவதில்தான் முனைப்புடன் இருக்கின்றார்கள்.
இவற்றிலிருந்து மாறுபட்ட புதிய நோக்கத்துடன் பெரியாரை உள்வாங்கி ஒரு இயக்கம் வரவேண்டும். டெல்லியில் ஒரு கண்ணையா குமார் வந்தது போல் இங்கும் ஒரு உத்வேகத் தலைவன் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் தமிழினம் முன்னேறும்.
உங்க கருத்துகளையும் அனுப்புங்க பாஸ்