டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர்கள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை தேவை: ஜி.ராமகிருஷ்ணன்
தமிழக மருத்துவ மாணவர்கள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை தேவை என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சரத்பிரபு மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் யுசிஎம்எஸ்சி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த தமிழக மாணவர் சரத்பிரபு, இவர் தற்கொலை செய்துகொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. மாணவரின் இந்த மரணத்தில் பல்வேறு விதமான சந்தேகங்கள் இருப்பதாக கேள்விகள் வழுத்துள்ளது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மரணத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இந்நிலையில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
முன்னுக்கு பின் முரணான தகவல்கள்
அந்த அறிக்கையில், திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி -தனலட்சுமி தம்பதியரின் மகனும், டெல்லி யுசிஎம்எஸ்சி கல்லூரியின் முதுநிலை பொதுமருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவருமான சரத் பிரபு, தனது அறையில் சந்தேகத்துக்குரிய விதத்தில் மரணம் அடைந்திருக்கிறார். அறை நண்பர்களும், கல்லூரி நிர்வாகமும் பெற்றோர்களுக்கு அளித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பார்க்கும் போது, பலத்த சந்தேகம் எழுகிறது.
மீளாத் துயரில் குடும்பத்தினர்
கோவை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்து, நீட் நுழைவு தேர்வில் வென்று, ஜிப்மர் கல்லூரியில் கிடைத்த வாய்ப்பை மறுத்து சரத்பிரபு டெல்லி கல்லூரியில் சேர்ந்த உடன், பெரு மகிழ்ச்சி கொண்ட அவரது குடும்பம் தற்பொழுது மீளா அதிர்ச்சியிலும், துயரத்திலும் மூழ்கியிருக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலு, திருப்பூர் மாவட்ட குழு செயலாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலையும், ஆதரவையும் அளித்துள்ளனர்.
விஷ ஊசி போட்டு கொலை
ஏற்கனவே ஓராண்டுக்கு முன்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் படித்து வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் விஷ ஊசி ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மாணவரும் மர்மமான முறையில் இறந்திருக்கிற இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. சரவணனின் கொலையை, தற்கொலை என மூடி மறைக்கவே டெல்லி காவல் துறை முயற்சித்தது.
நீதிமன்றம் சென்ற விவகாரம்
இந்த விஷயத்தில் மாநில அரசும் அக்கறையற்று இருந்தது. அவரது குடும்பத்தார் நீதிமன்றத்தை நாடிய பிறகே விஷ ஊசி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆயினும் இன்னும் காவல்துறை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. சரத்பிரபு குடும்பத்துக்கும் இந்நிலை நேர கூடும். முதல் சம்பவத்திலேயே மாநில அரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளித்திருந்தால், இந்த துயர சம்பவம் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கலாம்.
தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு
இந்த இரு மரணங்கள் குறித்து விரிவான, நேர்மையான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்; நடந்தது கொலை எனில் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை தரக் கூடிய விதத்தில் வழக்கு தொடர வேர்ண்டும்; டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உரிய கவனத்துடனும், அவசரத்துடனும் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.