ஆயுதம் எடுக்கும் மாணவர்கள்… தொடர்கதையாகும் மோதல்கள்
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கல்லூரிக்குள் மோதல், பேருந்துகளில் மோதல், ரயில்களில் மோதல் என தினசரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர் செய்தியாக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. இந்த கல்வியாண்டில் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை கிட்டத்தட்ட 30 மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து அதன்படி 5 மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மாணவர்கள் மோதிக்கொள்வது தொடர்கதையாகிவருகின்றன. பொது இடங்களில் ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
20 ஆண்டு பிரச்சினை
சென்னை நகருக்குள் பல கல்லூரிகள் இருந்தாலும் அடிக்கடி மோதல் நடப்பது ஒரு சில கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கு மட்டும்தான். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் இந்த மோதலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவுமே பலன் தரவில்லை.
அரசு கலைக்கல்லூரிகள்
மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி. இந்த 3 கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இவர்களுடன் ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்களும் பொது இடங்களில் மோதிக் கொள்கின்றனர்.
சந்திக்கும் பிரச்சினைகள்
இந்த 4 கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்துதான் வருகின்றனர். ஒரே பேருந்தில் 4கல்லூரி மாணவர்களும் சந்திக்கும் போதுதான் பிரச்சினை உருவாகிறது.
ரூட் தல பிரச்சினை
ஒரு கல்லூரிக்கு ஒரு வழித்தடத்தில் செல்லும் பேருந்துக்கு ஒரு ரூட் தலை என ஒரே கல்லூரியில் பல ரூட் தலைகள் உள்ளனர். மாநிலக் கல்லூரியில் 4, பச்சையப்பன் கல்லூரியில் 4, நந்தனம் கல்லூரியில் 5 ரூட் தலைகள் உள்ளனர். நந்தனம் கல்லூரியில் 'சி' ரூட் தலைக்கு தனி அதிகாரமே இருக்கிறதாம். ரூட் தலைகள் வைத்ததுதான் அந்த பேருந்தில் சட்டம். அந்த ஒரு சில ரூட் தலைகள் செய்யும் பிரச்சினைதான் கல்லூரி பிரச்சினையாக வெடிக்கிறது.
திட்டமிடும் மாணவர்கள்
ஒவ்வொரு கல்லூரி வளாகத்துக் குள்ளும் இருக்கும் மரத்தடியில் இந்த தலைகள் தங்களுக்கென்று தனி இடம் வைத்துள்ளனர். அந்த மரத்தடியில் கூடி, பஸ்சில் மற்ற கல்லூரி மாணவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளை கூறுகின்றனர். அதன் பின்னர் அந்த கல்லூரி மாணவர்களைத் தாக்க, எந்த இடத்தில் கூடி ஒன்றாக பேருந்தில் ஏற வேண்டும், பேருந்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல திட்டங்களை அந்த மரத்தடியிலேயே திட்டமிட்டு மறுநாள் செயல்படுத்துகின்றனர்.
மாநிலக்கல்லூரி மாணவர்கள்
மாநிலக் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பல்வேறு பேருந்துகளில் வந்தாலும், பிரச்சினைகள் ஏற்படுவது சில பேருந்துகளில் மட்டும்தான். பெரம்பூரில் இருந்து வரும் 29ஏ, 29சி, அம்பத்தூரில் இருந்து வரும் 27எல், டோல்கேட்டில் இருந்து 6டி, வியாசர்பாடியில் இருந்து 2ஏ, கேகே நகரில் இருந்து வரும் 12ஜி ஆகிய வழித்தடங்களில் வரும் பேருந்துகளில்தான் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
பச்சையப்பன் கல்லூரி
இதேபோல பச்சையப்பன் கல்லூரிக்கு ஆவடியில் இருந்து வரும் 40ஏ, பெசன்ட் நகரில் இருந்து 47டி, பூந்தமல்லியில் இருந்து 53டி, பிராட்வேயில் இருந்து 15டி ஆகிய வழித்தட பேருந்துகளில் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர்.
நந்தனம் கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகளில் 23சி, 54எல், 45பி ஆகிய பேருந்துகளில் மாணவர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர்.
ஷிப்ட் பிரச்சினை
கல்லூரிகள் காலையில் தொடங்கி மாலையில் முடிந்த போது இந்த அளவிற்கு பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. ஆனால் இப்போது ஷிப்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு என்று படிப்பை தவிர கல்லூரி கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என நேரம் செலவிட முடியவில்லை. இதுவும் பிரச்சினைக்குக் காரணம். மாணவர்களின் மோதலை அரசியல் கட்சியினரும், ஜாதி சங்கத் தலைவர்களும் ஊக்குவிக்கின்றனர் என்கிறார் எஸ்.எப்.ஐ சங்கத்தலைவர்.
பாதிக்கும் சினிமாக்கள்
திரைப்படங்களில் மாணவர்கள் மோதிக்கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் இடம் பெறுகின்றன. ஒருவனை அடித்து வெற்றி பெறும் மாணவனை ஹீரோவாக கொண்டாடுகின்றனர். இதை மனதில் வைத்தும் மாணவர்கள் குழுவாக வந்து ஒருவரை ஒரு வெட்டி சாய்க்கின்றனர் என்கிறார் பிரபல மனநல மருத்துவர்.
மாணவர்களின் பிரச்சினை
கல்வியோடு, மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் இல்லையெனில் சென்னையில் மாணவர்களின் மோதலில் பொதுமக்கள்தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாக நேரிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அரசு நடவடிக்கை எடுக்குமா?