மான் தோல் கேட்டதை காரணமாக காட்டி சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி!
ஆட்சியர் கொலை வழக்கில் மான் தோல் கேட்டதை காரணமாக வைத்து ஆங்கிலேயே அரசு விடுதலை போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மாச்சாரியை 21 வயதில் சிறையில் அடைத்தது.
சென்னை: ஆட்சியர் கொலை வழக்கில் மான் தோல் கேட்டதை காரணமாக வைத்து ஆங்கிலேயே அரசு விடுதலை போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மாச்சாரியை 21 வயதில் சிறையில் அடைத்தது.
ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் 190 ஆண்டுகள் அடிமையாக இருந்தது இந்தியா. அவர்களிடம் இருந்து விடுதலையை பெற இந்தியர்கள் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
பல புரட்சிகள், பல கலங்கள், பல அகிம்சை போராட்டங்கள் என ஒரு வழியாக விடுதலையை பெற்றது இந்தியா. விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ஏராளம். அவர்களில் சிலரை இந்த 72வது சுதந்திர தினத்தில் நினைவில் கொள்வோம்.
நீலகண்டர்
நீலகண்ட பிரம்மாச்சாரி விடுதலைக்காக தன் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை சிறையில் கழித்தவர். இவர் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் -சுப்புத்தாயி தம்பதிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி 1889ஆன் ஆண்டில் மூத்த மகனாகப் பிறந்தார்.
நாடு முழுவதும் கொந்தளிப்பு
சீர்காழி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். 1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்த போது, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ரகசிய கண்காணிப்பு
அப்போது நீலகண்டர், ரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' 1907ஆம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். அதனால் நீலகண்டனை ஆங்கிலேயே உளவுக் காவல்துறையினர் ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர்.
சூர்யோதயம் பத்திரிக்கை
இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். "சூர்யோதயம்" எனும் பத்திரிக்கையை தொடங்கினார்.
வஉசி, பாரதி நட்பு
காங்கிரஸ் கட்சியில் உள்ள தீவிர குணம் படைத்த வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்பு கொண்டார் நீலகண்டர்.
இளம் வயதில்
இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர்.
நாடு முழுவதும் பிரபலம்
1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட போதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது.
மான் தோல் கேட்டதால்
ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன், வனத்துறையில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியதால் வாஞ்சிநாதனுக்கு துணை நின்றதாக நீலகண்டனும் கைது செய்யப்பட்டார்.
21 வயதில் சிறை
மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.