நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது.. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. எனவே தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85 சதவீத இடஓதுக்கீட்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளதால் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரி சென்னை சேப்பாக்கத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில் பாமகவினர் பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். தமிழக மாணவர்கள் சமச்சீர் கல்வி பயின்று வருவதால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு தான் நீட் தேர்வு எளிதானது.
இந்தியா முழுவதும் 3377 மருத்துவ கல்வி சீட்டுகளில் 3000 சீட்டுகள் சி.பி.எஸ்.சி பாடம் படித்த மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர். மருத்துவ உயர் பட்ட படிப்புகளில் தமிழக அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. 202 உயர்பட்டப்படிப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என நிர்பந்திக்கிறது. தமிழகத்தின் உரிமையை நாம் இழந்து கொண்டு வருகிறோம். தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நீட் தேர்வு சிதைப்பதாக உள்ளது
தமிழக அரசு கையாலாகாத அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 'நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அரசுக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.