மே 6-ஆம் தேதி நீட் தேர்வு... சிபிஎஸ்இ அறிவிப்பு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் எழுத்துத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.
நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதனால் ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் பாதிக்கப்படுவர் என்று கூறியும் மத்திய அரசு இதுகுறித்து பரிசீலிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடந்தன. மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் இருந்தனர். இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நீட் தேர்வுக்கான வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களையும் சேர்த்து பரிசீலனை செய்ய முடிவு செய்தது.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தான் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் மே மாதம் நீட் தேர்வு அறிவிக்கப்படலாம் என்று கருதியிருந்த நிலையில் மே 6-ஆம் தேதி நடத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பெற்றோர்களும், மாணவர்களுக்கு அவதி அடைந்தனர்.