இனி, தமிழ் மீடியத்துல படிக்கிற ஏழைகள் டாக்டர் ஆகவே முடியாதா?
நீட் தேர்வு ரேங்க் பட்டியலை பார்த்த பிறகு, தமிழ் வழியில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் இனி தான் மருத்துவர் ஆக முடியாதா என்கிற அச்சம் எழுந்துள்ளது.
சென்னை: தமிழ்வழிக் கல்வியில் கற்கும் மாணவர்களால் இனி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர் ஆக முடியாது என்ற அவநம்பிக்கையை தற்போது வெளியாகியிருக்கும் நீட் தேர்வு ரேங்க் பட்டியல் உணர்த்துகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலெல்லாம் முழங்கினார். அவர் மறைவையடுத்து, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார்.
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சட்ட முன்வடிவை உருவாக்கி, அதனைச் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அனுப்பினர் ஓபிஎஸ். ஆனால், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதைக் கிடப்பில் போட்டார். அந்த மசோதா அடங்கிய கோப்பு எங்கு உள்ளது எனத் தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
85% உள் ஒதுக்கீடு
பிறகு, முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை வெளியிட்டார். ஆனால், உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஏழையின் மருத்துவர் கனவில் இடி
அதன் பின்பு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விலக்குக் கோரி மீண்டும் ஒரு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து மத்திய அரசுக்கு சமர்ப்பியுங்கள் என்றார். அதை நம்பி மீண்டும் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்மூலம், நிச்சயம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று பதில் சொல்லி, தலையில் இடியை இறக்கியது.
75 சதவீதம் பேர் சிபிஎஸ்இ மாணவர்கள்
இந்தத் தீர்ப்பை அடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் நீட் தேர்வு ரேங்க் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் முதல் இருபது இடங்களைப் பிடித்தவர்களில் 15 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மற்ற 5 பேர் சமச்சீர் கல்வி ஆங்கில வழியில் படித்தவர்கள். தற்போது வெளியாகி இருக்கும் ரேங்க் பட்டியலில் தமிழ் வழியில் படித்தவர்கள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை.
சிறுபான்மையாகிவிட்டதா தமிழ்?
தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் வெறும் 1.5 சதவீதம் தான். மீதி, 13-14 சதவீதம் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள். ஆனால், தமிழ்வழியில் படிப்பவர்கள் 85 சதவீத மாணவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் ஏழை மற்றும் அதிகம் கல்வியறிவு இல்லாத குடும்பங்களில் இருந்து வருகிறவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை 8,46,947 பேர் எழுதினார்கள். அதில் தமிழில் 15, 206 மாணவர்கள் எழுதினார்கள்.
தமிழ் வழியில் படிப்பவர்களின் நிலை?
அவர்களில் 1% மாணவர்கள் இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று இருப்பார்களா என்பது சந்தேகமே. இந்த ரேங்க் பட்டியல் இனி நீட் தேர்வில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் வெற்றி பெற்று மருத்துவர் ஆகமுடியாதா? என்ற கனம் நிறைந்த கேள்வியை எழுப்பியுள்ளது. நீட் தேர்வு விலக்கு ரத்தை வரவேற்றவர்கள் தான் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.