நீட் தேர்வு கட்டாயம்... தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம்.. ஜவாஹிருல்லா கண்டனம்
நீட் தேர்வை கட்டாயமாக்கி தமிழக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்துவிட்டன என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்
சென்னை: நீட் தேர்வை கட்டாயமாக்கி தமிழக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைத்துவிட்டன என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று திடீரென உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. அதனால் நீட் தேர்வு அடிப்படையில் செப்டம்பர் 4-க்குள் மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, நீட் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இன்று திமுக தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜவாஹிருல்லா பேசியதாவது:
அக்கறை இல்லை
தமிழகத்தை ஆட்சிச் செய்து கொண்டிருக்கிற பாஜகவின் பினாமி அரசிற்கோ இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் மோடி அரசிற்கோ தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எள் முனை அளவு கூட அக்கறை இல்லை.
என்ன ஆனது மசோதா?
இதன் வெளிப்பாடுதான், நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்குச் செய்த துரோகமாகும். பிப்ரவரி மாதம் நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.
கண்டனம்
இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 6 மாதங்கள் தமிழக மாணவர்கள் மீது அக்கறை இல்லாத மோடி அரசு தூங்கிக் கொண்டிருந்தது. அண்மையில் நிர்மலா சீதாராமன் சென்னை வந்த போது ஓராண்டுக்கு விலக்கு தர முடியும் என்று கூறினார். ஆனால் என்ன ஆனது? நீட் தேர்வு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடந்தது கூட நாடகம்தான். மத்திய, மாநில அரசின் இந்தப் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறேன் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.