நீட் தேர்வு... தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே வினாத்தாள் இல்லை... சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
நீட் தேர்வில் தமிழ், ஆங்கில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்ற வழக்கில் சிபிஎஸ்இ வரும் 24-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மத்திய அரசால் நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ், ஆங்கில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்ற வழக்கில் சிபிஎஸ்இ வரும் 24-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மே 7-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 88,000 பேர் எழுதினர். சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
ஜூன் 8 -இல் முடிவுகள்
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பெற்றோரிடையே எரிச்சலை கிளப்பியது. தலை விரி கோலம், முழுக்கை சட்டைகள் அரைக்கையாக குறைப்பு உள்ளிட்ட ரணகளங்களால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளாடை அகற்றம்
கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்வில் மாணவி அணிந்திருந்த உள்ளாடையில் மெட்டாலிக் ஸ்டிராப் இருந்ததால் அதை அகற்றுமாறு கூறியது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இத் தேர்வில் அவரவர் மாநில மொழிகேற்ப கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.
பாரபட்சம் என புகார்
இந்நிலையில் தமிழ், ஆங்கில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்றும் பாரபட்சத்துடன் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதன் மீது இன்று நீதிபதி மகாதேவன் விசாரணை நடத்தினார்.
மே 24-இல் விளக்கம்
அப்போது நீதிபதி கூறுகையில், புகார் தொடர்பாக சிபிஎஸ்இ வாரியம் வரும் 24-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார். ஏற்கெனவே ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவர் என்ற நிலையில் இப்போது இதுபோன்ற சர்ச்சை வேறு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.