நீட் தேர்வு கஷ்டமா இருந்துச்சுப்பா.. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கிய கண்ணன்!
Recommended Video
மதுரை: நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மகள் ஐஸ்வர்யா கூற கேட்டதால் இடிந்து போன கண்ணன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மரணமடைந்தார்.
நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வால் கிராமப்புற, மாநில பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகிவிடும் என்று பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதாக சிபிஎஸ்இ தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது.
மொழி பிரச்சினை
தனது குழந்தைகளின் மருத்துவர் படிப்பு ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பெற்றோர் வேறு வழியின்றி ராஜஸ்தான், கேரளம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றனர். அங்கு அடிப்படை வசதிகளின்றி தவித்தனர். மொழி பிரச்சினையால் தேர்வு கூடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
கட்டுப்பாடுகள்
நீட் தேர்வே தமிழக மாணவர்களுக்கு கொடுமை என்றால் அவர்களை டார்ச் அடித்து சோதிப்பது, மூக்குத்தியை வலிக்க வலிக்க கழற்றுவது, கையில் சாமி கயிறுகளை பிளேடால் அறுப்பது போன்ற தேவையில்லாத செயல்களை சிபிஎஸ்இ செய்துள்ளது. இந்த தேர்வுக்கு இத்தனை அளப்பறை செய்த சிபிஎஸ்இ, டெல்லியில் 10-ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு வினாத்தாள் வாட்ஸ்ஆப்பில் கசியும் வரை விட்டுவிட்டது.
தந்தையை இழந்த மகன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கத்துக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் எர்ணாகுளம் சென்றார். அங்கு மகனை தேர்வு கூடத்தில் விட்டுவிட்டு விடுதிக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
தந்தையை இழந்த மகள்
இதுபோல் மதுரையில் தேர்வு எழுதிவிட்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, தனது தந்தை கண்ணனுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேர்வு எப்படி இருந்தது என கண்ணன் கேட்டுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா மிகவும் சோகத்துடன் சற்று கடினமாக இருந்ததாகவே கூறியுள்ளார். இதனால் தனது மகளின் மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவருக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு வழியிலேயே நெஞ்சை பிடித்துக் கொண்டு மரணமடைந்தார்.
சிறு வயதில் தந்தை இழப்பு
படிக்கும் வயதில் தந்தையை இழந்துவிட்டதால் அந்த இரு குடும்பத்து பிள்ளைகளுக்கும் எத்தனை கொடுமையான விஷயமாகியிருக்கும். என்னதான் அரசு நிதியுதவி, கல்வி செலவு ஏற்பு என சலுகைகளை வழங்கினால் தந்தை வழி வருமா. இதுபோல் நீட் நீட் நீட் என இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமா என்ற அச்சம் எல்லாருக்கும் உள்ளது. இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.