எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊர் வந்தடைந்தது.. கனிமொழி, கலெக்டர் நேரில் அஞ்சலி
விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி வீட்டிற்கு இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்களும், பொதுமக்களும் கிருஷ்ணசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Recommended Video
திருவாரூர்: நீட் தேர்வை மகன் எழுத சென்றபோது உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகேயுள்ள,விளக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் மகன், கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் கிருஷ்ணசாமியும் சென்றிருந்தார்.
நேற்று காலை மகாலிங்கம் தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஆனால், கிருஷ்ணசாமி சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் கூறப்படுகிறது.
கிருஷ்ணசாமி இறந்தது தெரியாமல் மகாலிங்கம் தேர்வெழுதி முடித்தார். தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த பிறகு அப்பா எங்கே என மகாலிங்கம் கேட்டு கதறியது பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
இதனிடையே கிருஷ்ணசாமியின் உடல் அவரது மைத்துனர் அன்பரசன் என்பவரிடம் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணசாமியின் உடலை அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் விளக்குடியிலுள்ள தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி வீட்டிற்கு இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்களும், பொதுமக்களும் கிருஷ்ணசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
காலை சுமார் 7.45 மணியளவில், கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் நேரில் ஆறுதல் கூறினார். மகாலிங்கம் மேற்படிப்பு செலவை அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும், காலை 8.15 மணியளவில் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, கிருஷ்ணசாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கல்வியை மாநில பட்டியலில் சேர்ப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று கனிமொழி கூறினார்.