நீட்டுக்கு மட்டுமல்ல... நாட்டுகே நெருக்கடிதான்... எதிர்த்து போர் செய்வோம்- ஸ்டாலின்
தமிழகத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: இது நீட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல.. மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரும் போராட்டம் என்று தாம்பரத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் பிரச்சினையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆட்சி நடைபெற்று வருகிறது.
அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும். அனிதாவின் தற்கொலை நீட் தேர்வுக்காக நடந்த கொலை என்றும் ஸ்டாலின் சாடினார்.
தாம்பரத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.
நீட் மசோதா
எதிர்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்டு விட்டனர். வாக்குறுதி கொடுத்த நிர்மலா சீதாராமன் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு தருவோம் என்கிற உறுதிமொழி என்னானது?
15 ரூபாய் கூட போடலையே
மோடி அரசு கறுப்பு பணத்தை கொண்டு வந்து மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போட வேண்டும் என்று கூறினார். ஆனால் 15 ஆயிரம் அல்ல... 15 ரூபாய் கூட போடவில்லையே. அதற்கு எந்த பதிலும் இல்லை.
பாஜக ஆட்சிதான் நடக்கிறது
தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. செயல்பட முடியாத நிலையில், மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடக்கிறது.
அனிதா கொலை
அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும். நீட் தேர்வால்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது கொலை.
இது நீட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரும் போராட்டம்.
ஏழைகள் செல்ல முடியுமா?
ரூ. 3 லட்சம் செலவு செய்து நீட் பயிற்சி வகுப்புக்கு ஏழை மாணவர்கள் எப்படி செல்ல முடியும்?. காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வந்தபோது எதிர்த்தவர் கருணாநிதி. கருணாநிதி தொடர்ந்த வழக்கில் நீட் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அளித்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மெஜாரிட்டி இல்லாத அரசு நடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு கேள்வி கேட்கட்டும். சட்டசபையை கூட்ட ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் என்பதால் சபாநாயகரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தரவில்லை. சட்டசபையை கூட்டும் போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்
மிகப்பெரிய போர்
அடுத்த போராட்டம் அதிமுக அரசுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும். தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போர் தொடங்க உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.