டிஆர்பிக்காக சர்ச்சையை கிளப்பும் விஜய் டிவி நீயா? நானா? - இப்படி ஒரு தலைப்பு தேவையா?
நீயா? நானா? நிகழ்ச்சியை இப்போது யாரும் பார்க்கவில்லை என்பதால் டிஆர்பிக்காக சர்ச்சையான தலைப்பு ஒன்றை வைத்துள்ளனர். அது யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்பதுதான்.
சென்னை: விஜய் டிவியில் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை தேர்வு செய்துள்ளது. ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ள நீயாநானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
ஜிமிக்கி கம்மல் பாடல் சமீபத்தில் பிரபலமானது. இதில் நடனமாடிய கேரள பெண்கள் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டனர். இதனை மனதில் வைத்துக்கொண்டு தமிழக பெண்களையும், கேரளா பெண்களையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி நடத்தி டிஆர்பியை ஏற்றிக்கொள்ள நினைக்கிறது விஜய் டிவி.
பெண்களை காட்சிப்பொருளாகவே, அழகுப்பொருளாகவே பார்க்கும் மனப்பான்மை எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
சர்ச்சையை கிளப்பும் நீயா? நானா?
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் தமிழக பெண்களும், கேரளா பெண்களும் பங்கேற்க உள்ள விவாதம் இடம் பெறுகிறது. யார் அழகு என்பதுதான் விவாதத்தின் தலைப்பு. இதற்கான புரமோவே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
|
இப்படி நடத்தலாமே
தமிழக அரசா? கேரள அரசா? யார் சிறந்த ஆட்சியாளர்கள்? என்று விவாதம் நடத்தலாமே என்று கேட்கிறார் ஒரு வலைஞர்.
விஜய் டிவிக்கு சாட்டையடி
தமிழ் நாட்டையும்,கேரளாவையும் ஒப்பிட வேண்டுமெனில் எத்தனையோ தலைப்புகளில் அதை செய்ய முடியும். ஆட்சி,தொழிற்சங்கங்கள்,நீர் மேலாண்மை,பொது சுகாதாரம்,திரைத்துறை,இரு பக்கமும் உள்ள நாட்டுபுற வடிவங்கள், கவிதைகள் என விடயங்களா இல்லை? இரு பக்கமும் உள்ள பெண் விவசாயிகள் சங்கங்களை அழைத்து இரு பக்க அனுபவத்தையும் கேட்கலாம் என ஏன் தோன்றவில்லை? என்று கேட்கிறார் கவின்மலர்.
|
வேறு தலைப்பே இல்லையே
நீயா நானா நிகழ்ச்சியில் பேசுவதற்கு எத்தனையோ தலைப்பு இருக்க பெண்களின் அழகு பற்றி பேச தலைப்பு தேர்வு செய்த நீயா நானா வெட்கப்பட வேண்டும் என்ற கூறியுள்ளார் சந்தியா என்ற சமூகவலைதளவாசி.
வேறு தலைப்பு இல்லையா?
டெங்குவில் மக்கள் மடிந்து வருகின்றனர். விவசாயிகள் பிரச்சினை இன்னமும் தீரவில்லை. தமிழகத்தில் அரசியல் நிலைமை படு மோசமாக உள்ளது. இப்படி சமூகத்தில் பல பிரச்சினைகளைப் பற்றி பேசி தீர்க்காமல் பெண்களின் அழகை பற்றி பேசி டிஆர்பியை ஏற்றிக்கொள்வதற்கு பதில் அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடலாமே என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.