தமிழன் காட்டுமிராண்டியா? ஜல்லிக்கட்டு விவாதத்தால் அனல் பறந்த நீயா, நானா!
சென்னை: ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் நேற்று அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக வாததத்தில் மோதிக்கொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு என்பது மிருகவதையாகும் என்ற கோஷத்தோடு, இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா மற்றும் பல என்.ஜி.ஓக்கள் பிரச்சாரம் செய்துவருகின்றன. வழக்கு தொடரப்போவதாக அச்சுறுத்தியுள்ளன.
அதேநேரம், ஜல்லிக்கட்டை தடுக்க மிகப்பெரிய பன்னாட்டு லாபி செயல்படுவதாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். நாட்டு மாட்டு இனங்களை அழிப்பதற்காக காளைகளை அவர்கள் குறிவைத்துள்ளதாகவும், இது ஒரு பன்னாட்டு அரசியல் சதி வலை எனவும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
மாட்டுக்கு வலிக்கும்
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்களை அமரச் செய்து விஜய் டிவி நேற்று நீயா, நானா நிகழ்ச்சி நடத்தியது. இதில் எதிர்பார்ப்பாளர்கள் கூறிய கருத்துகள் பெரும்பாலும், மாட்டுக்கு வலிக்கும் என்பதாகத்தான் இருந்தது.
குற்றச்சாட்டுகள்
மாட்டுக்கு சாராயம் ஊற்றுகிறார்கள், வாடி வாசல் (மாடு அவிழ்த்துவிடப்படும் பகுதி) பகுதியில் மாடு நிற்கும்போது அதன் வால் முறுக்கப்படுகிறது, கடிக்கப்படுகிறது, எனவேதான் அது ஆக்ரோஷமாக வெளியே ஓடிவருகிறது என்று பலரும் பேசினார்கள்.
நாட்டியம் ஆடலாமே
மாடுபிடி வீரர்கள் காயமோ, மரணமோ அடைந்தால், அவர்கள் வீட்டு பெண்கள் நிலை என்னவாகும் என பங்கேற்ற பெண்கள் சிலர், சென்டிமென்டாக பேசினர். பரதம், நாட்டியம், பாட்டு பாடுதல் போன்றவற்றில் திறமையை வளர்க்க வேண்டுமே தவிர, மாடுபிடிப்பதில் கிடையாது என்று ஒரு பெண் அரைகுறை தமிழில் பேசினார்.
உண்மை இதுதான்
ஆனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பேசியதுதான் நச். ஷோ முழுக்க ஆதரவாளர்கள் பாயிண்டுகள்தான் நெத்திப்பொட்டில் அடிப்பதை போல இருந்தது. வாடி வாசலில் கொடுமைப்படுத்தவில்லை என்று கூறிய ஒருவர், மூக்கணாங்கயிறை அறுத்துவிடுவார்கள் அவ்வளவுதான். கயிறை அறுத்துவிட்டால், காளைகள் துள்ளி விளையாடுவது இயல்பு. அப்படி துள்ளி விளையாடிதான் மாடுகள் வெளியே ஓடிவருகின்றன. ஏனெனில், வாடிவாசல் பகுதி முழுக்க கேமரா கண்காணிப்பில் உள்ள பகுதி என்றார்.
பிளட் டெஸ்ட் உண்டு
மாடுகளுக்கு சாராயம் கொடுக்கப்படுவதாக பரப்பபடும் கருத்தில் உண்மையில்லை என்பதை ஆதாரத்தோடு போட்டுடைத்தார் ஒரு பங்கேற்பாளர். 2009க்கு பிறகு ஜல்லிக்கட்டின் தரம் எங்கோ போய்விட்டதாக கூறிய அவர், பங்கேற்கும் காளைகளுக்கு மட்டுமல்ல, மாடுபிடி வீரர்களுக்கும், மது குடித்துள்ளார்களா என்பதை ரத்த சோதனை மூலம் கண்டறிந்தபிறகே போட்டி நடைபெறும் விவரத்தை அவர் எடுத்து கூறினார்.
நாய் விரும்பிதான் வாழுதா
விலங்கு நல ஆர்வலர்கள் தங்கள் வீடுகளில் ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற உயர் ஜாதி நாய்களை வளர்க்கிறார்களே, அவையெல்லாம், நமது சீதோஷ்ண நிலைக்கு சற்றும் பொருந்தாதவை, அவற்றின் உடல் மற்றும் மனநலம் எப்படியெல்லாம் நம்மூரில் பாதிக்கப்படுகிறது. ஆனால் அதுபோன்ற நாய் வளர்ப்போர் கவுரவமாக பார்க்கப்படும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன என்று கேட்டார் ஒரு பங்கேற்பாளர். நாய்களுக்கு குளிப்பதே பிடிக்காது, ஆனால் குளிக்க வைக்கும்போது கொடுமைப்படுத்துகிறோம் என்று தெரியவில்லையா என்றும் கேள்வி எழுந்தது.
மேல்தட்டு மனோபாவம்
பரதம், பாடல் பாடுவது மட்டுமே கலை என்ற நினைப்பு, மேட்டுக்குடித்தனமானது. உடலை வலிமையாக்குவது, மனதுக்கு வீரத்தை கொடுப்பது போன்ற கலைகளை கீழ்மையாக நினைப்பது சரியில்லை என்று, ஒரு ஆர்வலர் பதிலடி கொடுத்தார்.
அட்வெஞ்சர்
வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் அட்வெஞ்சர் விளையாட்டு பிரியர்கள். தங்கள் உயிரை எப்போதுமே பணயத்தில் வைத்துதான், அட்வெஞ்சர் செய்வார்கள். அதுபோன்ற அட்வென்ஜர் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. தமிழன் செய்வதாலேயே அந்த அட்வெஞ்சரை கீழாகவும், வெள்ளைக்காரர் செய்பவற்றை மேலானதாகவும் பார்க்கும் போக்கு சரியில்லை. அட்வெஞ்சர் இல்லாத வாழ்க்கை, சுடுகாட்டுக்கு சமமானது என்றார் ஒரு பங்கேற்பாளர் ஆக்ரோஷமாக.
காட்டுமிராண்டி
தமிழருக்கு யாரும், நன்னடத்தையை சொல்லித்தர வேண்டாம். தமிழனுக்கு இயல்பாகவே அது தெரியும். பீட்டா தனது வெப்சைட்டில், காட்டுமிராண்டி தமிழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது. தமிழன் காட்டுமிராண்டி கிடையாது என்றார் சேனாதிபதி என்ற பங்கேற்பாளர்.
பன்னாட்டு அரசியல்
நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் இன்னும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். அவரின் பெரும்பாலான கருத்துக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருந்தது. 7 வருடங்கள் முன்பு நீயா, நானாவுக்காக, கல்லூரி மாணவர்களிடம் சர்வே எடுத்தோம். பெரும்பாலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினர். ஆனால், இப்போது நாங்கள் சர்வே எடுத்தபோது பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டை ஆதரித்தனர். ஜல்லிக்கட்டை ஒழிக்க சர்வதேச அரசியல் பின்புலம் உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
வளரும் நாடுகள் இளிச்சவாயர்களா?
ஸ்பெயினிலும் மற்ற முன்னேறிய நாடுகளிலும், மாடுபிடி விளையாட்டை பீட்டா உள்ளிட்ட எந்த ஒரு விலங்கு நல அமைப்பாவது தடை செய்துள்ளதா?, வளரும் நாடுகளில் மட்டும் 'நான் சொல்வதைத்தான், நீ கேட்க வேண்டும்' என்ற தோரணையை அந்த அமைப்புகள் பின்பற்றுகின்றன. பைக், கார் ரேஸ்கள் உலகெங்கும் நடக்கின்றன. உயிருக்கு ஆபத்து என்பதால் தடை செய்யப்பட்டுள்ளதா, கால்பந்தாட்ட போட்டிகளில் மோதல்கள் நடந்து ஒரே நேரத்தில் 15 ரசிகர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மேலை நாட்டில் நடந்துள்ளது.
தமிழனுக்கே பாடமா
பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று கூறி வாழ்ந்தவன் தமிழன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வல்லளார் வாழ்ந்த மண் இது. தமிழனுக்கு ஜீவகாருண்யம் குறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று சீற்றத்தோடு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோபிநாத்.