டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை.. மும்பையில் தொடங்கியது
எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க இதுவரை மண்டல அளவில் எரிவாயு டேங்கர் லாரி டெண்டர் விடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய மாநில முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கிறது.
இதனால் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமாக சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது.
இதை எதிர்த்து தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 12ம் தேதியில் இருந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தென்மண்டல டேங்கர் லாரி சங்கத் தலைவர் பொன்னம்பலம் பங்கேற்று இருக்கிறார். இதில் முக்கியமான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.