பெண்ணைக் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை – பக்கத்துவீட்டு அண்ணன், தங்கை கைவரிசை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெண் ஒருவரைக் கட்டிப்போட்டுவிட்டு, நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அண்ணன், தங்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முகமதுகுத்தூஸ்.
இவர் சவுதி அரேபியாவில் டீசல் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்வர்நிஷா. இவர்களுக்கு முகமது பாட்சா என்ற மகன் உள்ளார்.
தனியாய் இருந்த அன்வர்நிஷா:
முகமதுபாட்சா நாலூர் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று மதியம் மகன் பள்ளிக்கு சென்றதும் அன்வர்நிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
எதிர்வீட்டுப் பெண்மணி:
அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் ஜெயந்தி என்பவர் ஒரு புடவையை தைத்து கொடுத்து விட்டு சென்றார்.
முகமூடி நபர்கள் கைவரிசை:
அதனை வாங்கி கொண்டு அன்வர் நிஷா வீட்டுக்குள் சென்றபோது அவரை பின் தொடர்ந்து 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் அன்வர்நிஷா கையில் வைத்திருந்த புடவையை எடுத்து அவரை கட்டினர்.
பணம், நகை கொள்ளை:
மேலும் வாயில் டேப் ஓட்டி அவர் சத்தம் போட விடாமல் செய்தனர். சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூபாய் 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பின் வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர்.
விரட்டிப் பிடித்த மக்கள்:
இதில் பின்வாசல் பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் வாலிபர் ஒருவர் பேக்குடன் தப்பி செல்வதை கண்டு அவரை விரட்டி பிடித்தனர்.
எதிர்வீட்டுக் குடும்பம்தான் திருடர்கள்:
இதுபற்றி நாச்சியார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் எதிர்வீட்டில் வசிக்கும் ஜெயந்தியின் மகன் ஜெகன்சுந்தர் என்பதும், அவர் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
கொள்ளையடிக்க கூட்டுத்திட்டம்:
மேலும் தனியாக வசிக்கும் அன்வர்நிஷா வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் வகுத்து ஜெகன்சுந்தர் தனது தங்கை லாவண்யா என்பவருக்கு பேண்ட், சட்டை அணிவித்து முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாயும், மகளும் தலைமறைவு:
கொள்ளையடிக்கப்பட்ட 60 பவுன் நகையுடன் லாவண்யாவும், அவரது தாய் ஜெயந்தியும் தலைமறைவாகி விட்டனர். பிடிபட்ட ஜெகன்சுந்தரிடம் இருந்து ரூபாய் 15 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்ப்பட்டது.
போலீஸ் தீவிர விசாரணை:
இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய தாய், மகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.