நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் எரித்துக் கொலை- போலீசார் தீவிர விசாரணை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த அச்சன்புதூர் பகுதியை சார்ந்தவர் செல்லதுரை மகன் ராஜகோபால் என்ற சண்டியர். இவர் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.
காவல்துறைக்கு உளவு சொல்லும் பணியையும் கூடுதலாக செய்துள்ளார். இது உள்ளூருக்குள் அவருக்கு பகையை உருவாக்கியுள்ளது. மேலும் அச்சன் புதூர் பகுதியில் புதியதாக குடிவந்த ஒருநபருக்கும் இவருக்கும் பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் நேற்று இரவு யாரோ சிலர் இவரை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடல் தலை இல்லாமல் எரிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் பாளை திம்மராஜபுரம் அடுத்த கீழநத்தம் செல்லும் வழியில் முடிக்குளம் என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.