ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மீட்ட அதிகாரிகள் - நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிடியாக மீட்டுள்ளனர்.
நெல்லை மாநகரட்சி எல்லையை ஓட்டியுள்ளது சுத்தமல்லி கிராமம். இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பணிபுரிந்த தலையாரி ஓருவர் இலவச பட்டா பெற தகுதி இல்லாத 4 பேருக்கு 50 சென்ட் வீதம் பட்டா போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை எதிர்த்து சுத்தமல்லியை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்குட்டி பாண்டியன் மேல்முறையீடு செய்தார். அதன் அடிப்படையில் ஆர்டி ஓ விசாரணை நடத்தி தகுதியற்றவர்களின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அந்த இடம் அரசு சொத்தாக மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஏற்கனவை இலவச பட்டா பெற்றவர்கள் அரசு அதிகாரிகள் துணையோடு அனுபவ பாத்திய ரசீதும் பெற்று கொண்டு போலியான ஆவணங்கள் தயாரித்து அந்த இட்த்தை வேறு சில நபர்களுக்கு பத்திர பதிவு செய்து விற்று விட்டனர்.
இடத்தை வாங்கிய நபர்கள் சிலர் அதில் வேலி அமைத்தும், கடைகள் கட்டியும வாடகைக்கு விட்டுள்ளனர். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை இயக்க தலைவர் மாணிக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்க உத்தரவிட்டது.
அதன்படி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் 4 மாத அவகாசம் கொடுத்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து கலெக்டர் கருணாகரன் உத்தரவின் பேரில் நெல்லை தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் 4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.