புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்.. நெல்லையில் பள்ளி ஆசிரியர் தற்கொலை!
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி பள்ளி ஆசிரியர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறத்தி நெல்லை அருகே பள்ளி ஆசிரியர் விஷமறிந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் போராட்டக் களத்திலேயே சமைத்து உண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
அரசுப் பள்ளி ஆசிரியர்
இதனிடையே நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த காளிமுத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லை.
போராடிய காளிமுத்து
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்களுடன் இணைந்து காளிமுத்துவும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் இல்லையென்றால் ஆசிரியர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என உணர்ச்சி பொங்க பேசினாராம் காளிமுத்து.
விஷமருந்தி தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய காளிமுத்து வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.
அதிர்ச்சி
மயங்கி விழுந்த காளிமுத்துவை அவரது உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி காளிமுத்து உயிரிழந்தார்.
இதனையடுத்து காளிமுத்து தற்கொலை குறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தற்கொலை விவகாரம் நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.