கூந்தன்குளத்தில் பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு- கணக்கெடுப்பில் தகவல்
நெல்லை: தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கூந்தன்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
பறவைகள் சரணாலயம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழகம் முழுவதும் ஓரே நாளில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பறவைகள் சரணாலயமாக கருதப்படும் கூந்தன்குளம், அதை சுற்றியுள்ள காடன்குளம், திருமலாபுரம்,ராமகிருஷ்ண்புரம், விஜயநாராயணரபுரம் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு நடந்தது.
இப்பணியில் நெல்லை வனச்சரக அலுவலர் தர்கீஸ், வனவர் பால்ராஜ், தொழில்நுட்ப உதவியாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் மேற்பார்வையில் கிட்டதட்ட 50 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கணக்கெடுத்தனர்.
இதில் பறவைகள் சரணாலயமான கூந்தன்குளத்தில் கூழைகிடா, செங்கல்நாரை, பாம்புதரா, பட்டைதலை வாத்து, அரிவாள்மூக்கன், பூநாரை, பவளக்கால், உள்ளான், ஊசிவால் வாத்து, கரண்டிவாயன் உள்பட 40 வகை நீர் பறவைகளும், 25 வகையான நிலவாழ் பறவைகளும் கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து குளங்களில் தண்ணீர் இருப்பதால் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.